| செயலாகச் சிந்தித்தது. உணவு, பழக்கவழக்கங்கள் ஆகியவற்றில் நகர்ப்புறத்துப் பெண்கள் துணிந்த அளவு நாட்டுப் புறத்துப் பெண்கள் துணிவதில்லை. நகர்ப்புறத்துப் பெண்களில் பெரும்பாலோருக்கு, உடை அணிவதிலும், பிறரைக் கவர்வதிலும் இருக்கிற அவ்வளவு அக்கறை நாட்டுப்புறத்துப் பெண்களுக்கு இல்லையா-அல்லது இருக்க வசதி இல்லையா என்று நினைத்தான் அவன். பட்டினத்தில் ஒரு தாய்க்குக்கூடத் தான் நாலைந்து குழந்தைகளுக்குத் தாய் என்பதைவிடப் பெண் என்பதே அதிகமாக ஞாபகம் இருக்கிறது. நாட்டுப்புறத்தில் அப்படி இல்லை. ஒரு பெண்ணைத் தாயாராக உணரும்போது - மனம் விகாரப் படுவதில்லை. பெண்ணாக உணரும்போது மனம் விகாரப் படாமலிருக்க முடிவதில்லை. கர்ப்பிணிகளை எங்கே கண்டாலும், எவ்வளவு அழகாகக் கண்டாலும், காமவுணர்வு ஏற்படுவதில்லை என்பது நினைவு வந்தது முத்துக்குமரனுக்கு. பகல் உணவுக்குப்பின் - உறங்க முயன்று உறக்கமும் வராத காரணத்தினால் லாட்ஜு க்கு மிக அருகில் இருந்த மியூஸியம், ஆர்ட் காலரி, கன்னிமரா நூல் நிலையம் ஆகியவற்றைப் பார்த்து வரலாமென்று புறப்பட்டான் அவன். மழை நின்று சிறு தூறலாகி இருந்தது. பாந்தியன் ரோடில் தென்பட்ட கர்ப்பிணிகளைக் கண்டபோது பகலில் தான் சிந்தித்த சிந்தனை நினைவு வந்தது. அவனுக்கு சிலருடைய முகங்களைப் பார்த்தால் பட்டினம் போக பூமியாயிருப்பதுபோல் தோன்றியது; வேறு சிலருடைய முகங்களைப் பார்த்தால் பட்டினம் சிரமப்பட்டுக் கொண்டிருப்பது போலும் இருந்தது. சில இடங்களைப் பார்த்தால் பட்டினம் அழகாகவும், ஆடம்பரமாகவும் இருப்பதுபோல் தோன்றியது; வேறு சில இடங்களைப் பார்த்தால் பட்டினம் ஆபாசமாகவும், அருவருப்பாகவும், வேதனையாகவும் இருப்பதுபோல் தோன்றியது. எது உண்மை, எது பெரும்பான்மை என்று வந்தவுடன் அவ |