களுக்கேற்றபடி நவநாகரிகப் பட்டுப் புடவைகள் எடுத்துக்கொள்ள வேண்டியிருந்தது. பகல் பதினொரு மணிக்குப் போனால் ஒரு மணி வரையாவது ஆகும். போக் ரோடு - பங்களாவிற்குப் போய்த் தன்னோடு முத்துக்குமரனை உடனழைத்துக் கொண்டு போக விரும்பினாள் அவள். தன்னோடு முத்துக்குமரனைப் புடவைக் கடைக்கு உடன் அழைத்துச் செல்ல எண்ணிய போதே அந்த எண்ணத்திண் மறுபுறம் தயக்கமாகவும் இருந்தது அவளுக்கு. அவன் உடன்வர மறுத்து விடுவானோ என்று பயந்தாள் அவள். ‘‘ஐயா உங்களைப் புடைவைக் கடைக்கு அழைச்கிட்டுப் போகச் சொன்னாரு’’ என்று டிரைவர் பத்தேகால் மணி சுமாருக்கே அவள் வீட்டு வாசலில் காரைக் கொண்டு வந்து நிறுத்திவிட்டான். அவள் காரில் ஏறி உட்கார்ந்ததும், ‘‘நேரே பாண்டி பஜாருக்குத்தானே’’ என்று கேட்ட டிரைவரிடம், ‘‘இல்லே! பங்களாவுக்கே போ. அவுட்ஹவுஸ்லேருந்து வசனகர்த்தா சாரையும் கூட்டிக்கிட்டுப் போயிடுவோம்’’ - என்றாள் மாதவி. கார் போக் ரோட்டை நோக்கி விரைந்தது. - அவள் போய்ச் சேர்ந்தபோது முத்துக்குமரன் அவுட்ஹவுஸ் வராந்தாவில் உட்கார்ந்து அன்றைய காலைத் தினசரியைப் படித்துக் கொண்டிருந்தான். அவள் காரிலிருந்து இறங்கி அருகே போய் நின்றதும் அவன் பேப்பரிலிருந்து தலையை வெளியே நீட்டி எட்டிப் பார்த்தான். ‘‘வாசனை ஜமாய்க்குதே? அப்துல்லா கொடுத்த செண்ட் போலேருக்கு...’’ ‘‘இன்னார் கொடுத்தான்னு கூட வாசனையே எடுத்துச் சொல்லுமா என்ன...’’ |