பக்கம் எண் :

நா. பார்த்தசாரதி191

பிரமாதமான நாடகம் இதுவரை பார்த்ததே இல்லேங்கிற மாதிரி மலேயா
முழுவதும் பேசிக்கிறாப்பல பண்ணிட்டு வரணும்’’ என்றான் அவன்.

     சிங்கப்பூர் போகிற ‘ஏர்- இந்தியா போயிங்’ பம்பாயிலிருந்து கம்பீரமாக
வந்து லாண்ட் ஆகியது. ஓசை கிறீச்சிடப் பிரம்மாண்டமான ‘போயிங்’
விமானம் இறங்கி வருகிற காட்சியைப் பிரமிப்போடு பார்த்தான் முத்துக்குமரன்.
அவனைப் போன்ற நாட்டுப்புறத்துக் கவிஞனுக்கு இவையெல்லாம் புது
அநுபவங்கள். புதுமையும் கர்வமும் கலந்த உணர்வுகள் அவன் மனத்தில்
நிறைந்திருந்தன. மாதவி அன்று வெளிநாட்டுப் பிரயாணத்துக்காக பிரமாதமாக
அலங்கரித்துக் கொண்டிருந்தாள். யாரோ ஒரு புதிய அந்நியப் பெண்ணைப்
பார்ப்பது போல் அவளைத் திரும்பத் திரும்பப் பார்த்து மகிழ்ந்தான் அவன்.
சிறிது நேரத்தில் விமானத்தில் வந்து அமருமாறு பிரயாணிகள்
அழைக்கப்பட்டார்கள்.

     மாதவி, முத்துக்குமரன், கோபால் மூவரும் விமானத்தை நோக்கி
நடந்தார்கள். விமானத்துக்குள்ளே நுழைந்ததும் மிகவும் ரம்மியமான
வாசனையும் மெல்லிய வாத்திய இசையும் காதில் ஒலித்தது. முத்துக்குமரன்,
மாதவி, கோபால் மூவரும் அடுத்தடுத்து மூன்று ஸீட்டுகளில் உட்கார
ஏற்பாடாகியிருந்தது. நடுவில் மாதவியும் இந்த ஓரத்தில் முத்துக்குமரனும் அந்த
ஓரத்தில் கோபாலும் அமர்ந்தார்கள். போயிங் விமானம் கம்பீரமான ஒலி
முழக்கத்துடன் கிளம்பியபோது மண்ணைவிட்டு மேலே பறக்கும் உற்சாகம்
மூவர் மனத்திலும் நிறைந்திருந்தது. மண்ணைவிட்டு மேலே பறப்பதுதான்
எவ்வளவு உற்சாகமாக இருக்கிறது?

     விமானம் மேலெழும்பியதுமே கோபால் விஸ்கி வரவழைத்துக் குடித்தான்.
முத்துக்குமரனும் மாதவியும் ஆரஞ்சு ஜூஸ் குடித்தார்கள். மூவருமே எகானமி
கிளா