| இருந்து விட்டதைக் கவனித்தவன்போல், ‘‘அடடே! வாத்தியார் கீழே இறங்கி வரவேயில்லையா?’‘ - என்று போலியான அனுதாப வார்த்தைகளை உதிர்த்தான். முத்துக்குமரன் அதற்குப் பதில் சொல்லவில்லை. விமானம் புறப்பட்டது. பழையபடி முன்வரிசை ஆசனத்தில் அப்துல்லாவும், கோபாலும் அருகருகே அமர்ந்து பேசத் தொடங்கியிருந்தார்கள். மாதவி முன்பு உட்கார்ந்திருந்ததுபோலவே முத்துக்குமரனுக்கு அருகே உட்கார்ந்து ரொம்பவும், சோர்ந்துவிட்டது போல் முகத்தைக் கைக்குட்டையால் மூடிக் கொண்டாள். சிறிது நேரம் ஒருவருக்கொருவர் பேச எதுவுமில்லை. யாரோ மெல்ல விசும்புகிறார், போலிருந்தது. பின் ஸீட்டில் பார்த்தான் முத்துக்குமரன். பின் ஸீட் பக்கத்து ஸீட் எல்லாம் காலியாயிருந்தன. ஏதோ சந்தேகம் தட்டியது மனத்தில். அவள் முகத்திலிருந்த கைக்குட்டையை எடுக்க விரைந்தது அவன் கை. அவள் அந்தக் கையைத் தடுத்தாள். மீறி அவன் அந்தக் கைக்குட்டையை அவள் முகத்திலிருந்து எடுத்தபோது அவள் கண்ணீர் வடித்து மெல்ல அழுது கொண்டிருப்பது தெரிந்தது. ‘‘இது என்ன காரியம்? வந்த இடத்திலே ஊர் சிரிக்கணுமா?’’ ‘‘எனக்கு நெஞ்சு கொதிக்குது...’’ ‘‘ஏன்? என்ன வந்தது இப்ப? ‘‘ஒரு மரியாதைக்குக் கூட அந்தத் தடியன் நீங்களும் இறங்கி வாங்க ‘சார்’னு உங்களைக் கூப்பிடலியே?’’ ‘‘அவன் யாரு என்னைக் கூப்பிடறதுக்கு?’’ கேட்டுக் கொண்டே அந்தக் கைக்குட்டையால் அவள் கண்ணீரைத் துடைத்துக் கொடுப்பதுபோல், அவள் தலையைக் கோதிக் கொடுத்தான் முத்துக்குமரன். |