| ‘‘எல்லோரும் ஷாப்பிங் போறாங்க! பினாங்கைவிட்டு இன்னிக்கி ராத்திரியே நாம் புறப்படறோம். நீயும் போய் ஏதாவது வாங்கிக்கணும்னா வாங்கிக்க. மாதவிகிட்ட உனக்காகவும் சேர்த்துப் பணம் கொடுத்திருக்கேன். கார் வேணும்னா எடுத்திட்டுப் போயிட்டு வந்திடுங்க. ரெண்டு பேரும் சேர்ந்தே போய் ஷாப்பிங் முடிச்சிக்கலாம். அப்புறம் புறப்படற வேளையிலே டயம் இருக்காது’’ ‘‘.......’’ ‘‘என்னது? நான் வேலை மெனக்கெட்டுப் போய் உங்கிட்டச் சொல்லிக்கிட்டிருக்கேன். பதில் சொல்லாமே இருக்கியே...?’’ நீ சொல்றதைச் சொல்லியாச்சில்லே...?’’ ‘‘எனக்கொண்ணுமில்லே! உனக்காகத்தான் சொன்னேன்...’’ ‘‘அதாவது - என்மேலே உனக்கும் அக்கறையிருக்குன்னு காமிக்கிறே! இல்லியா - ?’’ ‘‘இப்படிக் குத்தலாகப் பேசாதே வாத்தியாரே! எனக்குப் பொறுக்காது- ’’ ‘‘பொறுக்காட்டி என்ன செய்யிறதா உத்தேசமோ?’’ ‘‘சரி! சரி! உங்கிட்டே இப்போ பேசிப் பயனில்லை. நீ ரொம்பக் கோபத்திலே இருக்கிற மாதிரித் தெரியிது’’ - என்று கூறிவிட்டு முத்துக்குமரனிடம் மேலே ஒன்றும் பேசாமல் நழுவி விட்டான் கோபால். அவன் போன சிறிது நேரத்திற்கெல்லாம் மாதவி வந்தாள். அப்படி வந்தவள் முத்துக்குமரனை நேருக்குநேர் பார்க்கப் பயந்து தயங்கியவளாக எங்கோ பார்த்துப் பேசினாள். அவள் கையில் கோபால் கொடுத்த பணம் அடங்கிய கவர் இருந்தது. |