| தீவிரமா இறங்கியிருக்கேன். அதுக்கான ‘செலக்ஷன்’லாம் பட்பட்னு முடியணும்.’’ ‘‘சரி முடியேன்.’’ ‘‘முடிக்கிறதுக்கு முன்னே உன் யோசனையையும் கேட்கலாம்னு தான் வந்தேன் வாத்தியாரே?’’ ‘‘இந்த விசயத்திலே ‘நடிகர் திலகத்துக்கு’ நானா யோசனை சொல்லணும்...?’’ ‘‘இந்தக் கிண்டல்தானே வேணாம்கிறது...’’ ‘‘கிண்டலா? சே! சே! உள்ளதைத்தானே சொன்னேன்?’’ ‘‘இண்டர்வ்யூவுக்கு வந்திருந்தவர்களிலே ஆம்பிளைங்க ரெண்டு பேரையும் அப்படியே எடுக்கிறதா முடிவு பண்ணிட்டேன். ஏன்னா சங்கீத நாடக அகாடெமி செக்ரட்டரி சக்ரபாணியோட ரெகமண்டேஷனோடே வந்திருக்காங்க அவங்க ரெண்டு பேரும்...’’ ‘‘சரி! ஜமாயி...அப்புறம்...’’ ‘‘வந்திருந்த பொம்பளைகளிலே...?’’ ‘‘அத்தினி பேருமே அழகுதான்...’’ ‘‘அப்படிச் சொல்லிவிட முடியாது அந்த ‘மாதவி’ தான் சரியான வாளிப்பு. நல்ல உயரம், சரீரக் கட்டு, களையான முகம்...’’ ‘‘அப்படியா! ரொம்ப சரி...’’ ‘‘அவளை பெர்மனன்ட் ‘ஹீரோயினா’ வச்சுக்க வேண்டியது தான்...’’ ‘‘நாடகத்துக்குத் தானே...’’ ‘‘வாத்தியாரே! உன் கிண்டலை நான் தாங்க மாட்டேன்...இத்தோடு விட்டுடு.’’ ‘‘சரி பிழைத்துப் போ?...மேலே சொல்லு - ’’ என்று நண்பனை மேலே பேசுமாறு வேண்டினான் முத்துக்குமரன். கோபால் மேலே கூறத் தொடங்கினான். |