| பண்ண வந்திடுவேன். நான் வருவேன்னு தெரிஞ்சதும் உங்களுக்குச் சந்தோஷமா இல்லையா, சார்?’’ ‘‘வந்தப்புறம்தானே சந்தோஷம்.’’ -எதிர்ப்புறம் சிரிப்பொலி கேட்டது. ‘‘இந்தா...மாதவி! உன்னையெத்தானே? டைப் பண்றதுக்கு நீதான் வருவேயின்னு கோபால் சொன்னப்பதான் அவன்கிட்டே பதிலுக்கு என்ன சொன்னேன் தெரியுமா?’’ ‘‘என்ன சொன்னீங்க?’’ ‘‘கேட்டா நீ ரொம்ப சந்தோஷப்படுவே, ‘கதாநாயகியே கூட இருந்து ஹெல்ப் பண்ணினா நாடகத்தை வேகமா எழுதிடலாம்’’னேன்...’’ ‘‘கேக்கிறப்பவே எனக்கு என்னவோ செய்யுது...’’ ‘‘என்ன செய்யிதுன்னு சொல்ல வரலியாக்கும்...?’’ ‘‘நாளைக்கு நேரே வாரப்ப சொல்றேன்...’’ - என்று இனிய குரலில் கலக்கும் இன்பக் குறும்பின் விஷமத்தோடு பதில் சொல்லி ஃபோனை வைத்தாள் அவள். முத்துக்குமரனும் ஃபோனை வைத்துவிட்டு நிமிர்ந்தபோது அறை வாயிலில் நாயர்ப் பையன் காத்துக் கொண்டிருப்பது தெரிந்தது. அவன் கையில் ஒரு சிறிய கவர் இருந்ததைக் கண்டதும் - ‘‘என்னது? கொடுத்திட்டுப் போயேன் - ’’ என்று அவனைக் கூப்பிட்டான் முத்துக்குமரன். பையன் கவரைக் கொண்டு வந்து கொடுத்தான். கவர் கனமாக இருந்தது. மேற்புறம் ஒட்டியிருந்ததோடு முத்துக்குமரனின் பெயரும் எழுதியிருந்தது. பையன் கவரைக் கொடுத்துவிட்டுப் போய் விட்டான். அவசர அவசரமாக முத்துக்குமரன் அதைப் பிரித்த போது உள்ளே புத்தம் புதிய பத்துரூபாய் நோட்டுக்கள் நூறும், மேலாக ஒரு துண்டுக் கடிதமும் இருந்தன. கடிதத்தைப் |