பக்கம் எண் :

நா. பார்த்தசாரதி61

     ‘‘நேரிலே சண்டை போடணும். ‘சொல்றபடி கேட்டுக்கிட்டு ஒழுங்கா
இருன்னு’ உன் கன்னத்திலே ஒண்ணு வைக்கணும்...’’

     ‘‘செய்யுங்களேன். எனக்குக்கூட உங்ககிட்ட அப்படி ஓர் அறை
வாங்கணும்னு ஆசையாயிருக்கு...’’

     - இப்படி வெகு நேரம் நீண்டது அவர்களுடைய உரையாடல். இருவரும்
பேச்சை முடிக்க விருப்பமில்லமாலே முடித்துக் கொண்டார்கள். அவளிடம்
பேசுவதற்கு இன்னும் நிறைய மீதமிருப்பதாக உணர்ந்தபடியே அவனும்,
அவனிடம் பேசுவதற்கு நியை மீதமிருப்பதாக உணர்ந்தபடியே அவளும்
மனமில்லாமலே ஃபோனை வைத்தார்கள்.

     மனம் களிப்பினால் பொங்கி வழிந்த அந்த வேளையில் - நாடகத்துக்குப்
பிள்ளையார் சுழிபோட்டு எழுதத் தொடங்கினான் முத்துக்குமரன். பாண்டிய
மன்னன் மேல் காதல் கொண்ட ஒரு கழைக் கூத்தியைப் பற்றிய கதையை
மனத்தில் அமைத்துக் கொண்டு எடுப்பாகவும் - பிரமாதமாகவும் அமைய
வேண்டிய முதற் காட்சியை உருவாக்குவதில் அவன் ஈடுபட்டான். பாண்டிய
மன்னன் தன் அமைச்சர், புலவர், பரிவாரங்களுடன் கழைக் கூத்தைப்
பார்க்கும் காட்சி. அதில் கழைக் கூத்தாடுகிறவள் பாடுவதாக ஒரு பாடலையும்
எழுத வேண்டியிருந்தது. கழைக் கூத்தியான அந்தக் கதாநாயகியைக் கற்பனை
செய்ய நேர்ந்த போதெல்லாம் அவன் மனக் கண்ணில் மாதவி சிரித்துக்
கொண்டு நின்றாள். கதாநாயகனையோ அவன் கற்பனையே செய்யவில்லை.
தன்னையே பாவித்துக் கொள்வதை அவனால் தவிர்க்க முடியவில்லை
என்றுதான் சொல்ல வேண்டும். நடு இரவுக்கு மேல் நேரம் சரியாகத் தெரியாத
வேளையில் பங்களாவிலிருந்து கோபால் ஃபோன் செய்து முத்துக்குமரனை
அழைத்தான்.