படவில்லை.ஆனால் ச-ப, ச-ம முறையாய் சுரங்கள் யாவும் வரவேண்டுமென்று பூர்வ இசைத்தமிழ் நூல்களிலும் சங்கீத ரத்னாகரத்திலும் சொல்லப்படுகிறது. பூர்வம் தமிழ் மக்கள் சுரஞானத்தில் மிகுந்த தேர்ச்சியுள்ளவர்களாய் ச-ப ஒன்றோடொன்று பொருந்தும் ஓசையை நுட்பமாய் அறிந்து அதின் கிரமப்படி மற்ற சுரங்கள் யாவற்றையும் தெரிந்து யாழில் அமைத்துக் கானம் செய்துவந்திருக்கிறார்கள், என்பதை. "ஏற்றிய குரல் இளி என்றிரு நரம்பின் ஒப்பக் கேட்கும் உணர்வின னாகி" என்றும் "வண்ணப் பட்டடை யாழ் மேல் வைத்தாங்கு" என்றும் "குரல்வாய் இளிவாய்க் கேட்டனள்" என்றும் வரும் சிலப்பதிகார அடிகளால் தெளிவாகக் காண்கிறோம். வட்டப்பாலையில் வலமுறையாய் இணை இணையாய் அதாவது ச-ப வாக நின்ற சுரத்திற்கு ஏழாவது இராசியாக ஆயப்பாலையின் பன்னிரு சுரங்களும் வருவதை இதன் முன் மூன்றாம் பாகத்தில் பார்த்திருக்கிறோம். அப்படியே இடமுறையாய் கிளை கிளையாய் ஐந்தாம் ஐந்தாம் இராசியாய் ஆயப்பாலையின் பன்னிரு சுரங்களும் வருவதையும் பார்த்திருக்கிறோம். 2/3, 3/4 ஆகக் கண்டுபிடிக்கும் முறையைப் பார்க்கிலும் பூர்வம் தமிழ் நாட்டில் வழங்கிவந்த இசைத் தமிழ் முறையே சிறந்ததென்று காண்கிறோம். ஆகையினால் இதன் முன் குறித்த இரண்டு குறிப்புக்களின்படியும் பூர்வ தமிழ் மக்களின் கானமிருக்கிறதென்றும் தெளிவாகக் காணப்படுகிறது. ஆகையினால் (1) சுரங்களையும், (2) ஆயப்பாலைச் சுரங்களையும், (3) வட்டப்பாலைச் சுருதிகளையும், (4) நுட்பமான சுருதிகளையும் கணக்கினால் தெரிந்துகொள்ளவும், அதன்பின் தற்காலத்தில் வழங்கி வரு இராகங்களில் அவைகள் வழங்கிவருகிறதா என்று பார்க்கவும்வேண்டும்.
|