ளத்தில் நீந்த முயல்கிறேன்; நீந்துகிறேன். ஆனால், கரை காணாமல் வருந்துகிறேன்; இவ்வளவு பெரிய உலகத்தில் நள்ளிரவில் யான் ஒருத்திதான் இருக்கிறேன்" என்கிறாள். காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன் யாமத்தும் யானே உளேன். (குறள், 1167) பகலில் இருந்த சுற்றத்தாரும் நண்பரும் ஊராரும் எல்லோரும் இரவிலும் உள்ளனர். ஆனால், நள்ளிரவில் அமைதியில் மற்றவர்கள் உறங்கிக் கிடக்கும்போது, மனம் வேறு எதையும் நாட வழி இல்லாமல், துன்பத்திலேயே ஆழ்ந்து வருந்தும் தலைவிக்கு தான் ஒருத்திமட்டுமே இந்தப் பரந்த உலகத்தில் இருப்பது போன்ற தனிமையுணர்ச்சி ஏற்படுகிறது. அதனால்தான், "யான் உளேன்" என்கிறாள், வேறு எவரும் இல்லாதது போன்ற கொடிய தனிமையை உணர்கிறாள். தன் தனிமையைப் பற்றியும் இராக் காலத்தைப் பற்றியும் இவ்வாறே எண்ணிக்கொண்டிருக்கும்போது அவள் மனம் வேறொரு வகையாகத் திரும்புகிறது. அந்த இராக் காலமும் தன்னைப்போலவே தனிமை உற்றுக்கிடப்பதை உணர்கிறாள். இராக் காலம் வருகிறது; எல்லா உயிர்களையும் உறங்கச் செய்கிறது; தான் மட்டும் உறங்காமல் கிடக்கிறது, அதன் நிலையும் இரங்கத் தக்கதாக இருக்கிறது. "இராக் காலம் உயிர்களுக்கெல்லாம் நன்மை செய்கிறது. ஆயினும் இரங்கத் தக்கதாக இருக்கிறது. இதன் நிலை, இதற்கு என்னைத் தவிர, துணையே இல்லையே!" என்கிறாள், மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்துஇரா என்அல்லது இல்லை துணை. (குறள், 1168) |