| என்னும் குறளொடு பொருந்திய, தமிழ்ப் பூட்கை மறவரின் பொது வியல்பைக் குறிப்பதன்றி, வேற்றுநாட்டு மறவரின் சிறப்பியல்பைக் குறிப்பதாகாது. ஆதலால், |
| | "இழிசின னாகிய காசன் அரசனுடைய ஐய நடுக்கம் போக்க உதிரத்தால் நனைந்த தோலில் இன்று கோசமுறையில் ஆணையிட்டனன்" | |
| எனப் பெரும்புலவர் ரா. இராகவையங்கார் மேற்கோள் காட்டும் காசுமீர நாட்டு வரலாறாகிய இராச தரங்கணிப் பகுதி, கோசர் தமிழரல்லர் என்னுங் கொள்கைக்குச் சான்றாகாமை காண்க. |
| தமிழகத்தையடுத்து வடக்கிலுள்ள வடுகர், மோரியரின் தென்னாட்டுப் படையெடுப்பில் அவர் படைக்கு முன்னணியாக வந்துதவினர் என்பது, |
| | "முரண்மிகு வடுகர் முன்னுற மோரியர் தென்றிசை மாதிர முன்னிய வரவிற்கு" | (281) |
| என்னும் அகப் பகுதியால் அறியலாகும். |
| மோகூர் மன்னனாகிய பழையன் மோரியர்க்குப் பணியாமல் எதிர்த்து நின்ற போரில், கோசர் தம் சொல் தவறாமல் மோகூரையடுத்த ஆலம்பலத்துத் தோன்றி அவனுக்குதவின செய்தியை, |
| | "மழையொழுக் கறாஅப் பிழையாவிளையுட் பழையன் மோகூர் அவையகம் விளங்க நான்மொழிக் கோசர் தோன்றி யன்ன" | |
| (மதுரைக்காஞ்சி. 507-9) |
| | "பறைபடப் பணிலம் ஆர்ப்ப இறைகொள்பூ தொன்மூ தாலத்துப் பொதியிற் றோன்றிய நாலூர்க் கோசர் நன்மொழி போல வாயா கின்றே... ... ... ... ... .... ... | (குறுந்தொகை.15) |
| | "... ... ... ... ... ... ... ... வெல்கொடித் துனைகா லன்ன புனைதேர்க் கோசர் தொன்மூ தாலத் தரும்பணைப் பொதியில் இன்னிசை முரசங் கடிப்பிகுத் திரங்கத் தெம்முனை சிதைத்த ஞான்றை மோகூர் பணியா மையிற் பகைதலை வந்த மாகெழு தானை வம்ப மோரியர்" | (அகம். 251) |
| என்னும் பகுதிகள் தெரிவிக்கும், |
| கோசர் காசுமீரத்தினின்று வத்த நாட்டு வழியாய்த் தமிழ்நாடு வந்த வடவரெனின், தமிழரையடுத்த வடுகரே வடநாட்டராகிய மோரியர்க்கு உதவியிருக்கும்போது, அவரும் உதவா திருந்திருப்பரோ? |