பக்கம் எண் :

112தமிழியற் கட்டுரைகள்

என்னும் குறளொடு பொருந்திய, தமிழ்ப் பூட்கை மறவரின் பொது வியல்பைக் குறிப்பதன்றி, வேற்றுநாட்டு மறவரின் சிறப்பியல்பைக் குறிப்பதாகாது. ஆதலால்,

 

"இழிசின னாகிய காசன் அரசனுடைய
ஐய நடுக்கம் போக்க உதிரத்தால் நனைந்த
தோலில் இன்று கோசமுறையில் ஆணையிட்டனன்"

 
எனப் பெரும்புலவர் ரா. இராகவையங்கார் மேற்கோள் காட்டும் காசுமீர நாட்டு வரலாறாகிய இராச தரங்கணிப் பகுதி, கோசர் தமிழரல்லர் என்னுங் கொள்கைக்குச் சான்றாகாமை காண்க.
     தமிழகத்தையடுத்து வடக்கிலுள்ள வடுகர், மோரியரின் தென்னாட்டுப் படையெடுப்பில் அவர் படைக்கு முன்னணியாக வந்துதவினர் என்பது,

 

"முரண்மிகு வடுகர் முன்னுற மோரியர்
தென்றிசை மாதிர முன்னிய வரவிற்கு"

(281)

என்னும் அகப் பகுதியால் அறியலாகும்.
     மோகூர் மன்னனாகிய பழையன் மோரியர்க்குப் பணியாமல் எதிர்த்து நின்ற போரில், கோசர் தம் சொல் தவறாமல் மோகூரையடுத்த ஆலம்பலத்துத் தோன்றி அவனுக்குதவின செய்தியை,

 

"மழையொழுக் கறாஅப் பிழையாவிளையுட்
பழையன் மோகூர் அவையகம் விளங்க
நான்மொழிக் கோசர் தோன்றி யன்ன"

 

(மதுரைக்காஞ்சி. 507-9)

 

"பறைபடப் பணிலம் ஆர்ப்ப இறைகொள்பூ
தொன்மூ தாலத்துப் பொதியிற் றோன்றிய
நாலூர்க் கோசர் நன்மொழி போல
வாயா கின்றே... ... ... ... ... .... ...

(குறுந்தொகை.15)

 

"... ... ... ... ... ... ... ... வெல்கொடித்
துனைகா லன்ன புனைதேர்க் கோசர்
தொன்மூ தாலத் தரும்பணைப் பொதியில்
இன்னிசை முரசங் கடிப்பிகுத் திரங்கத்
தெம்முனை சிதைத்த ஞான்றை மோகூர்
பணியா மையிற் பகைதலை வந்த
மாகெழு தானை வம்ப மோரியர்"

(அகம். 251)

என்னும் பகுதிகள் தெரிவிக்கும்,
     கோசர் காசுமீரத்தினின்று வத்த நாட்டு வழியாய்த் தமிழ்நாடு வந்த வடவரெனின், தமிழரையடுத்த வடுகரே வடநாட்டராகிய மோரியர்க்கு உதவியிருக்கும்போது, அவரும் உதவா திருந்திருப்பரோ?