இவ் வுலகிலுள்ள உயிரினத் தொகுதியுள், மாந்தன் நாகரிகப் பண்பாட்டு வளர்ச்சிக்கேற்ற மதியுடைமைபற்றி உயர்ந்தவனே. அதனால், அவன் தன்னை உயர்திணை என்று கூறிக்கொண்டது உத்திக்கும் பொருந்துவதே. ஆயினும் அவன் தன்னை இறப்ப மதித்து, "இயலாது" என்னும் சொல் என் அகரமுதலியில் இல்லையென்றும், எண்பெருஞ் சித்துக்களை அடைவேன் என்றும், இறைவனே இல்லை யென்றும், உலக முழுவதையும் ஒரே குண்டில் ஒழித்துவிடுவேன் என்றும், தருக்கியும் செருக்கியும் தட்டுக்கெட்டுத் தடுமாறிக் கெடாவண்ணம், அவன் அவிந்தடங்கி அறிவுபெறும் வகையில், அஃறிணையுயிர்கட்கும் சிற்சில பேறுகளை ஒத்த அளவிலும் உயர்ந்த அளவிலும் இறைவன் அருளி யிருப்பது மிகமிகக் கவனிக்கத்தக்கது. |