நிகழ்கால வினையெச்சம் எது? |
"செய்து செய்பு செய்யாச் செய்யூச் செய்தெனச் செயச்செயின் செய்யிய செய்யியர் வான்பான் பாக்கின வினையெச்சம்பிற ஐந்தொன் றாறுமுக் காலமு முறைதரும்" | |
(நன். 343) |
என்னும் நூற்பாவால் 'செய்ய' என்னும் வாய்பாட்டு வினையெச்சம் அல்லது 'செய' என்னும் அதன் தொகுத்தல் வடிவு, நிகழ்காலமுணர்த்தும் எனக் கூறினர் பவணந்தி முனிவர். இதையொட்டியே, 'செய்ய' என்பது நிகழ்கால வினையெச்ச வாய்பாடென்று தொன்றுதொட்டு வழங்கி வருகின்றது. ஆயின் தொல்காப்பியர் இங்ஙனங் கூறாமை மட்டுமின்றி |
"செய்து செய்யூச் செய்பு செய்தெனச் செய்யியர் செய்யிய செயின்செயச் செயற்கென அவ்வகை ஒன்பதும் வினையெஞ்சு கிளவி." | |
(தொல். 713) |
என 'செய' என்னும் வாய்பாட்டை எதிர்கால வினையெச்சம் எனக் கருதுமாறு, 'செய்யியர்' 'செய்யிய' 'செயின்' என்னும் எதிர்கால வினையெச்ச வாய்பாடுகட்கும், 'செயற்கென' என்னும் எதிர்கால வினையெச்ச வாய்பாட்டிற்கும் இடையில் நிறுத்தியுமுள்ளார். |
இனி, 'செய்ம்மன' என்னும் வாய்பாடோவெனின், அதுவும் எதிர்கால வினையெச்சமே. 'செய்ம்மார்' என்னும் வாய்பாடு 'வான்' 'பார்' ஈற்று வினையெச்சங்களின் பன்மையான முற்றெச்சமாய்த் தெரிதலின், அதுவும் எதிர்காலச் சொல்லென அறியப்படும். |
தொல்காப்பியர், |
"வினையெனப் படுவது வேற்றுமை கொள்ளாது நினையுங் காலைக் காலமொடு தோன்றும்" | |
(தொல். 683) |
என, நிகழ்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் பொதுப்படச் 'செய்யும்', என்னும் ஒரே வாய்பாட்டை ஆண்டாரேயன்றி, |
"காலத் தாமே மூன்றென மொழிப" |
(தொல். 684) |
என முற்றும் எச்சமுமாகிய இருவகை வினைச்சொற்கும் பொதுவாகக் கூறியிருத்தலின் நிகழ்கால வினையெச்சமும் தமிழ்க்குண்டென்பது தேற்றம். |