பக்கம் எண் :

கால்டுவெல் கண்காணியாரின் சறுக்கல்கள் - தமிழ் வேற்றுமையமைப்பு41

     (2) வேற்றுமையுருபு, அசையுருபு, சொல்லுருபு, என இரு திறத்தது. அவற்றுள், சொல்லுருபுகள் அசையுருபுபோல் திட்டமுற்றவையல்ல. ஒரு வேற்றுமைக்குரிய பொருள்படும் சொல்லெல்லாம் அவ் வேற்றுமையுருபாக வரும். பொருள்பற்றி வேற்றுமையே யன்றிச் சொல் அல்லது உருபுபற்றி வேற்றுமையன்று.

     இதன் மறுப்பு வருமாறு:-

 

"ஏழாகுவதே
கண்எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி"

(தொல். 565)

என முதற்கண் ஒரே சொல்லுருபு கூறிய தொல்காப்பியர் பின்பு
  "கண்கால் புறம்அகம் உள்உழை கீழ்மேல்
பின்சார் அயல்புடை தேவகை எனாஅ
முன்இடை கடைதலை வலம்இடம் எனாஅ
அன்ன பிறவும் அதன்பால் என்மனார்"

(தொல். 566)

என அதனைப் பிற ஒருபொருட் சொற்களோடுஞ் சேர்த்து விரித்துக் கூறியமை காண்க.
     இனி, இதனையே நன்னூலார்,

 

"கண்கால் கடையிடை தலைவாய் திசைவயின்
முன்கார் வலமிடம் மேல்கீழ் புடைமுதல்
பின்பா டளைதேம் உழைவழி உழியுளி
உள்அகம் புறமில் இடப்பொரு ளுருபே"

(நன். 302)

எனப் பெருக்கிக் கூறியதும் காண்க.
     (3) 'காட்டு', 'மரத்து', என்பன போன்ற வேற்றுமையடிகள் ஒரு வேற்றுமையுருபும் பெறாது தொகைநிலையா யிருப்பதால், 6ஆம் வேற்றுமைக்கும் 7ஆம் வேற்றுமைக்கும் பொதுவாயிருக்கின்றன. இதனால், அவற்றை மயக்கவேற்றுமையெனக் கோடல் தகாது. ஒவ்வொரு வேற்றுமையும் வெவ்வேறுருபு கொண்டு ஒழுங்குள்ளதாக ஆசிரியரால் எழுதப்பெறும். சமற்கிருதத்திலும், பல வேற்றுமைகள் ஒரே வடிவு கொள்கின்றன.
  எ-கா :    
  மன : மனம் - 1ஆம் வேற்றுமை
  மன : மனத்தை - 2ஆம் வேற்றுமை
  மனஸ : மனத்தினின்று - 5ஆம் வேற்றுமை
  மனஸ : மனத்தின் - 6ஆம் வேற்றுமை
  மனோப்யாம் இருமனங்களால் - 3ஆம் வேற்றுமை
  மனோப்யாம் இருமனங்கட்கு - 4ஆம் வேற்றுமை
  மனோப்யாம் இருமனங்களினின்று - 5ஆம் வேற்றுமை
  மனோப்ய பலமனங்கட்கு - 4ஆம் வேற்றுமை
  மனோப்ய பலமனங்களினின்று - 5ஆம் வேற்றுமை