பக்கம் எண் :

211ஆய்வு

ஒற்றிக் கலம். சாத்தனது விலைத்தீட்டு” என்ற எடுத்துக்காட்டுகளால்
அறியலாம் (80).

     நாட்டுப்புறங்களில் வாழ்ந்த அக் காலச் சிறுவர்கள், பலவகை
விளையாட்டுகளை விளையாடும்போது, குழுக்களாகப் பிரிந்து, அக்குழு
ஒவ்வொன்றிற்கும் பெயர் வைத்து மகிழ்ந்தனர்.  இவ் வழக்கத்தினைச்
சேனாவரையர், “கூடிவரு வழக்கின் ஆடியற் பெயர்-பட்டி புத்திரர்,
கங்கைமாத்திரர் என்பன. இவை ஆடல் குறித்து இளையார் பகுதிபடக் கூடிய
வழியல்லது வழங்கப்படாமையிற் குழுவின் பெயரின் வேறாயின” என்று
குறிப்பிடுகின்றார். (165).

நெஞ்சில் பதிந்த நிகழ்ச்சி

    காட்டு வழியில், கள்வர்கள் பதுங்கி இருந்து அவ்வழியில் சென்றவரை
அடித்துத் துன்புறுத்தி அவர்களிடமிருந்த பொருளையும், ஆடைகளையும்
பறித்துக் கொண்ட நிகழ்ச்சி ஒன்று சேனாவரையர் உள்ளத்தில்
ஆழப்பதிந்திருக்கின்றது. அந் நிகழ்ச்சியினை அவர் பல இடங்களில் (101,
245, 395) குறிப்பிடுகிறார். மேலும், அவர் காலத்தில் திகம்பரஜைனர்
(கடவுளர்) காட்டு வழியிற் செல்வது உண்டு என்றும், அவர்களிடம் ஆடை
இன்மையாலும், அவர்களிடம் கள்வருக்கு அச்சம் இருந்தமையாலும்
அத்துறவிகளைக் கள்வர்கள் ஒன்றும் செய்யாமல் விட்டுவிடுவர் என்றும்
தெரிகின்றது.

     “வழி போயினார் எல்லாம் கூறை கோட்பட்டார் என்றவழி, கூறை
கோட்படுதல் கடவுளரை (திகம்பரர்களை) ஒழித்து ஏனையோர்க்கே
ஆயினவாறு போல” (101).

     “ஒரு காட்டின்கண் போவார் கூறை கோட்படுதல் ஒரு தலையாகக்
கண்டு இஃது இயற்கை என்று துணிந்தான், கூறை கோட்படா முன்னும் இக்
காட்டுள் போகில் கூறை கோட்பட்டான், கூறை கோட்படும் என்னும்” (245).

     “கூறைகோட்படுதல் கடவுளர்க்கு எய்தாதவாறு போல” (395).

     சேனாவரையர் தம் நெஞ்சில் பதிந்த நிகழ்ச்சியை இவ்வாறு பலமுறை
கூறுகின்றார்.

ஊர்கள்

     சேனாவரையர் கருவூரைக் குறிப்பிடும் இடங்கள் பல உண்டு.
கருவூர்க்குச் செல்லாயோ சாத்தா (13,68), கருவூரின் கிழக்கு (77, 110, 398)
என்பவை அவர் காட்டும் உதாரணங்கள். சேனாவரையர் காலத்தில்,
உறையூரும் சிராப்பள்ளிக் குன்றும்