கேடுவிளைவிக்கத் தக்க - குறைபாட்டினையும் எடுத்துக் காட்டினர். அது
வருமாறு: "நூல்களுக்கு மேலட்டையில் ஆங்கிலத்திலேயே பெயர் முதலிய
புத்தகத்தின் சகல செய்திகளும் குறிக்கப் படுவதைப் பல தடவைகளில்
கண்டித்து வந்தும் பிரசுரக்காரர் அதைக் கவனிக்காமல் ஆங்கிலத்திலேயே
தலைப்புகளை அச்சிட்டு வெளியிட்டு வருவதைக் கண்டு விசனியாமலிருக்க
முடியாது."1
வ.உ.சிதம்பரனார், திருக்குறள் முழுவதற்குமே உரை எழுதினார். அதில்,
அறத்துப்பால் மட்டும் அவர் காலத்தில்- அவராலேயே வெளியிடப்பட்டது.
மற்றிரு பால்களை வெளியிட வசதியில்லாமல் வருந்திய நிலையிலேயே
மறைந்தார். வ.உ.சி.யோடு, அவர் எழுதி வைத்திருந்த பொருட்பால் -
காமத்துப்பால் உரைகளும் மறைந்து போயினவாம்!
நனவாகாத கனவு
வ. வே.சு. ஐயர், சங்க இலக்கியங்களிலே சிலவற்றை ஆங்கிலத்திலும்,
பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்களிலே-சரித்திரங்களிலே சிலவற்றைத் தமிழிலும்
மொழி பெயர்த்து வைத்திருந்தார். இன்னும் பலவற்றை மொழி பெயர்க்கப்
போவதாகவும் அறிவித்திருந்தார். அவை வெளிவராமற் போனது தமிழ்
மொழியின் தவக்குறைவேயாகும். இதுபற்றித் தம்முடைய நண்பரொருவருக்கு
ஐயர் எழுதிய கடிதத்திலுள்ள குறிப்பு வருமாறு:
"குறுந்தொகையிலும் கலித்தொகையிலும் சில செய்யுள்கள்
தெரிந்தெடுத்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறேன்.
தற்பொழுது, தொமிஸ்தோவின் சரித்திரம் மொழி பெயர்த்துத் தயாராக
இருக்கிறது. கோர்னியின் ஸ்மித் அரைவாசி முடிந்திருக்கிறது.
பிரிதிவி ராஜனுடைய சரித்திரத்தை, அந்த ராஜ்புத்ர சிங்கத்தின்
காம்பீர்யத்திற்கும், போகா தூரத்துக்கும், பரிதாபகரமான முடிவுக்கும் ஏற்றபடி
எழுதுவதற்கு வேண்டிய சாமக்கிரியைகள் சேர்த்திருக்கிறேன்.