19. பத்தொன்பதாம் நூற்றாண்டின் அரசியலும் தமிழகத்தின் சமூக நிலையும் அரசியல் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கிலேயரின் ஆட்சியானது இமயம் முதல் குமரிவரையிலும், சட்லெஜ் முதல் பிரம்மபுத்திரா வரையிலும் விரிவடைந்திருந்தது. வெல்லெஸ்லி பிரபுவின் காலத்தில் டில்லி, அயோத்தி, மைசூர், ஐதராபாத்து, கருநாடகம், சூரத்து, தஞ்சாவூர் ஆகிய பகுதிகள் யாவும் பிரிட்டிஷாரின் உடைமையாய்விட்டன. தஞ்சை மராத்திய மன்னன் சரபோஜி, வெல்லெஸ்லி பிரபுவுடன் ஓர் உடன்படிக்கை செய்துகொண்டு (1799) தான் வாழ்ந்துவந்த கோட்டை ஒன்றைத் தவிரத் தன் தேசம் முழுவதையும் ஆங்கிலேயரிடம் ஒப்படைத்துவிட்டான். கிழக்கிந்தியக் கம்பெனியின் அரசாங்க நிருவாகத்தையும், அன்றன்றைய நடைமுறைகளையும் கட்டுப்படுத்தி ஓர் ஒழுங்குமுறையில் அமைக்கும் பொருட்டு பிரிட்டிஷ் பாராளுமன்றமானது 1773ஆம் ஆண்டிலும் 1781ஆம் ஆண்டிலும் இந்திய அரசாங்கச் சீர்திருத்தச் சட்டங்கள் இயற்றியது. அப்போது இந்தியாவில் வாரன் ஹேஸ்டிங்ஸ் கவர்னர் ஜெனரலாக இருந்தார். சென்னை அரசாங்கம் கவர்னர் ஒருவரின் தலைமையில் நிறுவப்பட்டது. பென்டிங்க் பிரபு (Lord William Bentinck) 1803-07 ஆண்டுகளில் சென்னையில் கவர்னராக இருந்தார். இவரே பல தொல்லைகட்குள்ளானார். பிரிட்டிஷ் சேனாதிபதியின் சில ஆணைகளை எதிர்த்து வேலூரில் ஒரு கிளர்ச்சி எழுந்தது (1806). வேலூர்க் கலகம் திப்பு சுல்தானின் பிள்ளைகள் வேலூர்க்கோட்டையில் சிறை வைக்கப்பட்டிருந்தனர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் |