| மனைவி மாதவிடாய் எய்திய காலத்துத் தலைவன் அவளைப் பிரிதல் கூடாது; அதுமுதல் பன்னிரண்டு நாட்கள் மகப்பேறு கருதி அவளோடு உடனுறைதல் செய்க எனவும். அக்காலத்துப் பரத்தையிற் பிரிவு ஆகாது எனவும் தொல்காப்பியம் நாள் வரையறை செய்யும்; தலைவனுக்கு அறிவுரை பகரும். இங்ஙனம் ஆகுநாள் ஆகாநாள் கூறுதலன்றி பரத்தையொழுக்கமே ஆகாது என்று கூறாமையை எண்ணிப் பார்க்க. புனல் விளையாட்டு என்பது பண்டைக் காலத்துச் சிறந்த பொழுதுபோக்கு. ஆற்றிலும் குளத்திலும் புதுவெள்ளம் தலைப்பெய்தபோது, காதலர்கள் புணை தழுவி நீர்விளையாடுவர். மனைவியோடு தலைவன் நீர் விளையாடினான் என்று வரும் இடங்கள் சிலவே. இவ்விளையாட்டிற்குப் பரத்தையர் துணை பெரிதாக மதிக்கப்பட்டது. பரத்தையொடு நீராடல் ஊரறிந்த காட்சியாக இருந்தது. அலமரல் ஆயமோடு அமர்துணை தழீஇ நலமிகு புதுப்புனல் ஆடக் கண்டோர் ஒருவரும் இருவரும் அல்லர் பலரே தெய்யஎம் மறையா தீமே (ஐங். 64) கோவலன் பலருங்காண மாதவியொடு கடலாடச் சென்றதை ஈண்டு ஒப்பு நோக்குக. போர்க்குச் செல்லும் வீரர்கள் தத்தம் மனைவிமாரை அழைத்துச் செல்வதில்லை; அங்கு அழைத்துப் போய்ப் பாசறையில் வைத்து இன்பம் கொள்வதில்லை. இங்ஙனம் மனைவியின்பம் விலக்கப்பட்டதன்றிப் பரத்தை மருவல் விலக்கப்படவில்லை. புறத்தோர் ஆங்கட் புரைவது என்ப (தொல்.1121) என்பதனால் போர்க்களத்தில் பரத்தையர்கள் உளராவர் என்பதும், அது ஒருவாறு பொருந்தும் என்பதும் அறியப்படும். மனைவியின் மாதப்பூப்புக் காலத்து உடன் வாழ்ந்து பிற்றை நாளில் பரத்தையொடு கூடியிருப்பான் எனவும், யாற்றின் தலைவெள்ளத்தில் கணிகையைத் தழுவி நீர் விளையாடுவான் எனவும் பாசறைக் கண் புறமகளை மருவுதலுண்டு எனவும் வரும் குறிப்புக்களால், பரத்தை நிலையைச் சமுதாயம் இயல்பான நிலையாகவும் இன்றியமையா நிலையாகவும் கருதிற்று என்பது தெளிவு. ஆடவர்தம் அகவாழ்விலும் புறவாழ்விலும் கணிகைமார் கொண்ட தொடர்பும் தெளிவு. XV சமுதாயக் காரணம் பிறநாடுகளிலும் இந்தியாவின் பிறபகுதிகளிலும் பரத்தைத் தோற்ற வளர்ச்சிகளுக்குச் சமயங்கள் அடிப்படைகளாகவும், |