பக்கம் எண் :

236தமிழ்க்காதல்

     பரத்தமைப்பட்ட பிற தலைவன்மார் என் செய்வரோ எனின், வீட்டிற்கு
வருவதும் போவதும் செய்குவர். புலவி நீக்கி மனைவியரோடு இன்புறுவர்.
இந்நிலை பிரிவு என்று சொல்லப்படும். பேகனோ ஏனையோர் போல
மனைவியைப் பிரியவில்லை; அவளைத் துறந்தான் காண். அதனால் புலவர்தம்
புறப்பாடல்களுக்குப் பொருளானான். அவனால் துறக்கப்பட்ட கண்ணகி
காரணமாகப் புலவர்கள் பாடினர் என்ற துறைக்குறிப்பில், “துறக்கப்பட்ட”
என்ற வினைநிலையைக் காண்க. துறவாது, பிறர்போல வந்துபோகும்
பிரிநிலையளவில் பேகன் நடந்திருப்பானாயின் புலவர்கள் பாடியிரார்
அன்றோ? அவன் பரத்தமை இல்லற எல்லை கடந்து சென்றமையால்,
இடித்துவரை நிறுத்த வேண்டிய கடப்பாடு நட்புடைய புலவர் பாலதாயிற்று.
இதனால் அளவுப்பட்ட பரத்தமை புறப்பொருளாகாது அகப்பொருளாம்
எனவும்,
சமுதாயம் அதனைச் சிந்தனை செய்யாது, கடியாது எனவும்
அறிகின்றோம்.


பிறனில் விழைதலும் பரத்தை வேட்டலும்

     பண்டைத் தமிழ்ச் சமுதாயம் பிறன்மனை நயத்தலை மாசாகப்
பாவமாகக் கேடாகக் கருதியது. பகைதரும், வழி வரும் அச்சம்தரும், இன்பம்
தாராது என்று நெறி காட்டியது. அதனால் பறனில்விழையாமை என்ற
அதிகாரத்தை அறத்துப் பாலில் வைத்தார் திருவள்ளுவர். விழைவதை ஒழுக்க
இழிவு எனவும், விழையாமையை ஆன்ற ஒழுக்கம் எனவும் சுட்டிக் காட்டினார்.
வரைவின் மகளிர் என்னும் பரத்தமையைப் பொருட்பாலில் அவர் அமைத்தது
ஏன்? பரத்தை வேட்கை அறக்கேடில்லையா? ஒழுக்கக் குறைவு இல்லையா?
இல்லை என்பது தான் நம் பண்டைச் சமுதாயம் காட்டும் விடை. அதற்கு
என் செய்வது?     

    இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
    திருநீக்கப் பட்டார் தொடர்பு                (குறள். 920)

     கள்ளுண்டல், சூதாடல் இவற்றுடன் பரத்தமை யாடல்
எண்ணப்படுதலின், இம்மூன்றும் கெட்ட பழக்கங்கள் என்பதுவே கருத்தாகும்.
திரு நீங்கும் எனக் குறித்தலின், இத்தீய பழக்கங்களால் பொருள் வீணாகும்
என்று அறிகின்றோம்: பரத்தைத் தோய்வினால், நல்லின்பம் கிடைக்காது,
பெருமை தாராது எனவும், பொருட்குக்கேடு அறிவுக்குக் கேடு எனவும்
திருவள்ளுவர் இடித்துரைப்பர். இவற்றோடு பின்வருங் குறளை ஒப்பு
நோக்குமின்.     

    பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
    இகவாவாம் இல்லிறப்பான் கண்              (குறள். 146)