பக்கம் எண் :

264தமிழ்க்காதல்

கொள்ளல் கூடாது என்று முழுத்தடையோ தமிழில் இல்லை. வெளிப்படுத்திக்
கொள்ளுங்கால், அது வேறிலக்கியமாகி விடும். ஆங்கிலப் புலமகனார்
செல்லியின் நூல்கள் அவர்தம் காதல் எண்ணங்களை எதிரொலிப்பன;
காதலுக்குத் தடை அவர் கவிதைக்குப் பிறப்பாயிற்று என்பர்

பெத்தரண் ரசலார்1. “மாழையொண்கண் பரவையைத் தந்து ஆண்டானை”,
“சங்கிலியோடு எனைப் புணர்த்த தத்துவனை” என்றாங்கு சுந்தரர்
பாடல்களில் அவர்தம் காதல் வாழ்க்கையைக் கற்கின்றோம். சங்கப் பெண்
புலவர் நக்கண்ணையார் கோப்பெரு நற்கிள்ளி என்னும் சோழ மல்லனைக்
காமுற்றார்; அவன் காமுறப் பெற்றிலர்.     

   
அடிபுனை தொடுகழல் மையணற் காளைக்கென்
    தொடிகழித் திடுதல்யான் யாயஞ் சுவலே
    அடுதோள் முயங்கல் அவைநா ணுவலே    (புறம். 83)


என்று தம் உள்ளத்துயரையும் நாணத்தையும் மூன்று பாடல்களாக (புறம். 83,
86, 85) எழுதினர். இப்பாக்கள் புறமாவன. புறநானூற்றில் சேர்க்கப்பட்டுள.
தன்னைப் புலப்படுத்திவிடும் பாடல் அகமாகாது என்பது இதன் குறிப்பு.


     புலவர்கள் கவியுணர்வு மிக்க பெருமக்கள். அன்னவர் காதல் வாழ்வும்
உணர்வும் துடிப்பும் மிக்கதாக இருக்கும். எனினும் என்செய்வார்? தாம்
எழுதும் அகப்பாடல்களில் தம்மைக் காட்டார்; தம் பாடல் மக்கட் பொதுமை
ஆக வேண்டும் என்று தம்மை ஒளித்துக்கொள்வர். ஆதிமந்தியாரும்
வெள்ளிவீதியாரும் அங்ஙனம் தம்மைப் புலப்படுத்தாது, புலப்படுத்தக்
கூடாதென்று அகம்பாடிய பெண் புலவர்கள். ஆதிமந்தி தன் கணவன்
ஆட்டனத்தியைக் காவிரி வெள்ளத்திற் பறிகொடுத்தாள்; இடந்தோறும் ஓடி
அலைந்து தேடினாள்; பெறும் பேதுற்றாள். புலவாட்டி வெள்ளி வீதியும்
கணவன் பிரிந்தது பொறாதது அவனிருக்கும் இடந்தேடிப் பாலை வழியிற்
புறப்பட்டாள்.


                
ஆதிமந்தியின் அகப்பாட்டு     

   
மள்ளர் குழீஇய விழவி னானும்
    மகளிர் தழிஇய துணங்கை யானும்
    யாண்டும் காணேன் மாண்டக் கோனை;
    யானுமோர் ஆடுகள மகளே; என்கைக்
    கோடீர் இலங்குவளை நெகிழ்த்த
    பீடுகெழு குரிசிலுமோர் ஆடுகள மகனே!      (குறுந்.31)

 ____________________________________________________
     Marriage and Morals, p.61