அமைக்கலாம். தடையின்று. பெயர் சுட்டிக் காதற் செய்கைகளை உவமையாகவோ பிறவாகவோ அகப்பாட்டில் வருவிப்பின், பரணர் ஒளவையார் வெள்ளி வீதியார் அறிந்தோர் அறியாதோ செய்த குற்றங்கட்கு இடனுண்டு; ஒருவர் சுட்டிய வரலாற்றுக் குறிப்பினால், சிலர் பாடிய அகம் அகத்தன்மை யிழத்தலும் உண்டு. புலமையில்லாதாரின் காதல் நிகழ்ச்சிகளைக் குறிப்பிட்டிருத்தாற்கூடப் புலமை மாந்தராகவும் ஆதிமந்தி வெள்ளிவீதியைப் போல அகம்பாடும் புலவோராகவும் இருந்துவிட்டால், இலக்கியம் இழுக்கப்படும். ஆதலின் அகப்பாட்டில் பிறர்தம் காதற்குறிப்பு வாராமை நல்லிலக்கணமாம் என்பது என் துணிபு. கற்கு முறை அகவிலக்கியம் கற்கும் அறிவுடை மாணவர் அகநோக்கோடு அகத் தமிழ்ச் செய்யுட்களைக் கற்பாராக. மாதங்கீரனார் மடல் பாடியது கண்டு, இவர் வாழ்க்கைக்கும் மடல் மாவுக்கும் தொடர்பு உண்டோ? கயமனார் மகட் போக்கிய செவிலித் துறையைத் திரும்பப் பாடியிருத்தலின், இவர்தம் மகள் உடன் போக்கு ஒருப்பட்டவளோ? காமக்கணியார் வெறித்துறை பாடியமையின், இவர் களவுக் காதலில் வெறியாடல் நிகழ்ந்ததோ? பெருங்கடுங்கோ பாலை பாடியதால், இவர் வாழ்க்கை பிரிவு மயமோ? ஒளவையார் அகம் பாடியமையின் மணமானவரோ? என்றெல்லாம் பாடிய பொருளுக்கும் பாடிய புலவர்க்கும் தொடர்பு மூட்டுதல், இயைபுகாண முயலல், பெருங் கல்விப்பிழை. புலவர்களும் காதலை நுகரும் இன்ப மக்களே. அன்னவர் இல்வாழ்வில் காதல்வீறுகள் பல துய்த்திருத்தல் இயல்பினும் இயல்பே துய்த்த இன்ப நயங்களை அகப்பாட்டாகச் சிலர் யாத்திருத்தலும் உண்டு. மற்றோர் தம் வாழ்வில் நிகழ்ந்த காதற் கூறுகளைக் கண்டும் கேட்டும் அவற்றை அகமாகச் சிலர் பாடியிருத்தலும் உண்டு. எனினும் பிறவகைக் காதற் பாட்டாகப் பாடாது அகத்திணைச் செய்யுளாக ஏன் பாடினார்? இதனை அகத்திணை கற்குநர் உணர்தல் வேண்டும், வேண்டும். காதல் என்பது இன்பத்துட் பேரின்பம், உணர்ச்சியுள் பேருணர்ச்சி, ஆற்றலுள் பேராற்றல், அடிப்படையுட் பேரடிப்படை, உரிமையுள் எல்லார்க்கும் உரியது, நட்பினுள் இருபாலாரையும் இணைப்பது, கல்வியுட் கசடறக் கற்க வேண்டுவது, நாணினுள் நனி நாணுடையது, ஒழுக்கத்துள் விழுமியது. இத்தகைய காதலை ஒவ்வொருவரும் விளங்கிக் கொள்ள வேண்டும்; அதன் வீறுகளையும் மாறுகளையும் தெரிந்துகொள்ள வேண்டும்; இணக்கம் பிணக்கங்களையெல்லாம் புரிந்து கொள்ள வேண்டும். யார்பால் எப்படித் தெரிந்து கொள்வது? யார் யாருக்கு |