பக்கம் எண் :

378தமிழ்க்காதல்

    குவியிணர்த் தோன்றி ஒண்பூ அன்ன
    தொகுசெந் நெற்றிக் கணங்கொள் சேவல்
    நள்ளிருள் யாமத்துது இல்லெலி பார்க்கும்
    பிள்ளை வெருகிற்கு அல்கிரை யாகிக்
    கடுநவைப் படீஇயரோ நீயே; நெடுநீர்
    யாணர் ஊரன் தன்னொடு வதிந்த
    ஏம இன்துயில் எடுப்பி யோயே         (குறுந். 107)


கூடியிருக்கும் ஒரு தலைவியின் சாபப் பாட்டு இது. நெடுநாட்பிரிவுக்குப்பின்
வந்த கணவனொடு உடனுறைந்து இரவெல்லாம் இன்புற்றுக் காலம் தோன்றாது
தன்மை மறந்து கிடக்கையில், பொழுது புலர்ந்தது என்பதனைக் கோழி கூவிக்
காட்டியது. கோழி கூவாவிட்டால் பொழுது புலராது என்பது காம நங்கையின்
கருத்துப் போலும்! அக் கோழி இரவில் இரைதேடும் வெருகுப் பூனைக்கு
உணவாகட்டும் என்று பாயற்பள்ளியில் அமர்ந்து கொண்டே சபிக்கலானாள்.
ஆதலின் பெண்ணின் காமவெப்பம் நல்லுடலின் வெப்பம் போலக் குறையாது
என்று அறியலாம். தலைவியைத் தலைவனுந்தானே பிரிகின்றான்? அவனுக்கு
ஆற்றாமையுண்டோ? அவனை ஆற்றுவார் உண்டோ? அவனுக்குக் காமம்
மிக்க கழிபடர் கிளவி உண்டோ? அவனுக்குப் புலம்பு உண்டோ?
இவ்வெல்லாம் தலைவிக்கே உரியவாகக் கற்கின்றோம். புணர்வினும் பிரிவினும்
காமம் அறாத நெஞ்சு மகளிர் நெஞ்சு ஆதலின், காமத்திணையாம்
அகத்திணைத் தலைமைக்குச் சான்றவள் தலைவியே என்பது தெளிவு.

கற்பிலக்கியம்

     அகத்திணை ஓர் கற்பிலக்கியம். சிற்றிளங்குமரியின் திண்ணிய காதல்
நெஞ்சத்திற்குமுன் குடும்பமும் ஊரும் உலகமும் எல்லாம் முடிவில் வழிபட்டு
இயைந்து ஒழுகுவதை அகவிலக்கியத்திற் காண்கின்றோம். அறியாமையால்
வழிபட்டு ஒழுகாதபோது, கற்பு பெற்ற குடும்பத்தையும் பிறந்த ஊரையும்
துறந்து உடன் போகின்றது; “ஏனை உலகத்தும் இயைவதால் நமக்கு”
(குறிஞ்சிப். 24) என உலகத்துறப்பே துணிகின்றது.     

    வேலன் வேண்ட வெறிமனை வந்தோய்
    கடவு ளாயினும் ஆகுக
    மடவை மன்ற வாழியே முருகே          (நற். 34)

வெறியாட்டின்கண் வேலன் மேல் ஏறி வந்த முருகக்கடவுளை நல்ல மடவன்
என்று இகழ்கின்றாள் நங்கை. பெண்கற்பு கடவுட் கற்பாம் (அகம். 184)
என்பது அகத்தமிழ்.

     கற்பின் சிறப்பு காதற்சிறப்பாக ஒளிரும். அச்சிறப்பு குடிக்கும்
சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் ஒழுங்கான வாழ்க்கை உண்டாக்கும்.
அகமாவதுவீடு; புறமாவது அவ்வீட்டில் வெளியாதலின், வீட்டுத்
தலைமையுடைய பெண்ணே உலகம் தாங்குகின்றாள். உலகத்தை வளர்க்கும்
ஆற்றல் பெண்ணினத்துக்குக் கற்புத்திண்மையால்