பக்கம் எண் :

அகத்திணைப் பாகுபாடு81

செலவழுங்கல்

     இளங் காதலர்களுக்குப் பிரிதல் என்பது முகவாட்டமும்
உயிர்வாட்டமும் தரும் கொடுஞ் செயலாகும். பருவத்தாரின் இம் மனநிலை
பருவம் வாராதார்க்குத் தோன்றாது; பருவம் கழித்தார்க்கோ மறந்து போகும்.
“உயிர்த்தவச் சிறிது காமமோ பெரிதே” (குறுந். 18) என்றபடி, தலைவி
ஆழ்ந்து அகன்று அடங்கிய காமச் செறிவு உடையவள்; “நம் பிரிபு அறியா
நலனொடு சிறந்த நற்றோள்” (அகம். 41) என்னுமாறு, பிரிவென்ற
ஒருநிலையுண்டு என்பதையே அறியாதவள். இம் மடமகளின் ஒப்புதலின்றிப்
பிரிந்து செல்லல் தலைவனுக்கு இயலாத, கூடாத காரியம். மின்விளக்கனைய
பெண்மை மெல்லியல் என்றும், எண்ண அதிர்ச்சி தாங்காதது என்றும்
உணர்ந்த தலைவன் மெத்தென்ற நயப்பாடுகளால் பிரிவுக் குறிப்பைத் தலைவி
உணரச் செய்வான். பிரிவிற்கு முந்திய சிலநாள் இரவுப் புணர்ச்சிகளில்
கணவன் மிகையாகச் செய்யும் காதலாரவாரம் இந்நயப்பாடுகளுள் ஒன்று.
“முலையை அகத்திட்டும் ஆசை நீங்கானாய்க் கூந்தலை அணி செய்கின்றான்;
எயிற்றுநீர் சுவைத்தும் தாகம் தணியானாய்க் கைவளையல்களை ஒழுங்கு
செய்கின்றான்; பொன்மார்பைப் பார்த்த பார்வை வாங்க மாட்டானாய் நுதல்
தடவுகின்றான்; ஏன் இங்ஙனம் ஒன்றல்ல பல செய்ய வேண்டும்? இனி
நெடுநாள் புணர்வில்லை என்ற ஏக்கம் போலும். இவன் தன் பேரார்வத்திடை
பிரிவுக் குறிப்பு உண்டு’ (“கழிபெருநல்கல் ஒன்று உடைத்து” கலி. 4) என்று

அறிவுடை நங்கையொருத்தி ஐயப்பட்டு அழுகின்றாள். இன்ன வருத்தத்தைக்
கண்டும் சட்டெனப் பிரிந்துபோம் துணிவு எத்தகைய வீரக்காதலனுக்கும்
தோன்றாது. புறப்படும்போது அப்பா என்று குழந்தை அழுதால், திரும்ப
வந்து மகவை அணைத்துக் கொஞ்சம் தந்தையைக் காண்கின்றோம்.
கணவன்மையும் இத்தகையதே.


     பாவை மாய்த்த பனிநீர் நோக்கமொடு
     ஆகத் தொடுக்கிய புதல்வன் புன்தலைத்
     தூநீர் பயந்த துணையமை பிணையல்
     மோயினள் உயிர்த்த காலை மாமலர்
     மணியுரு இழந்த அணியழி தோற்றம்
     கண்டே கடிந்தனம் செலவே ஒண்டொடி
     உழைய மாகவும் இனைவோள்
     பிழையலள் மாதோ பிரிதும்நாம் எனினே.   (அகம். 5)