பக்கம் எண் :

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 212

  இலக்கணச் செங்கோல்
யாப்புச் சிம்மாசனம்
எதுகைப் பல்லக்கு
மோனைத் தேர்கள்
தனிமொழிச் சேனை
பண்டித பவனி -
இவையெதுவும் இல்லாத -
கருத்துக்கள் தம்மைத்தாமே
ஆளக் கற்றுக்கொண்ட
புதிய மக்களாட்சி முறையே
புதுக்கவிதை !
 
என்று மு. மேத்தா ‘ஞானரதம்’ இதழ் ஒன்றில் எழுதியிருக்கிறார்.

     கருத்துக்கள் மிளிர, புதிய முறையில் கவிதை படைக்க முயன்று வெற்றிகரமாக
வளர்ந்து வருகிறவர்களை இனி கவனிக்கலாம்.

     எஸ். வைத்தீஸ்வரன் கணையாழி, தீபம், கசடதபற, ஞானரதம். அஃ ஆகிய
பத்திரிக்கைகளில் எல்லாம் அவ்வப்போது கவிதை எழுதியுள்ளார்.

     “வாழ்வை’ தன்னையிழந்து நோக்கும்போது ஒரு கவி மனத்தில் அனுபவப்
புல்லரிப்புகள் எத்தனையோ நேருகின்றன. அவைகளைக் கவிதையாக இனங்கண்டு
கொள்வதும், அதை ‘மொழியால் மொழி பெயர்த்து கவிதை பண்ணுவதும்’ ஆன
காரியத்தில் அக்கறையோடும் ஆர்வத்துடனும் ஈடுபடும் இவர் இயற்கைக் காட்சிகள்
எழுப்பும் மனச்சலனங்களைத்தான் அதிகமாகக் கவிதையாக்கியிருக்கிறார்.

     ‘காட்சி நிழல்கள்’ என்றொரு கவிதை குறிப்பிடத் தகுந்தது.
 
  வெயிலும் நிழலும்
கட்டிப் புரண்டு
வானில் சிவக்கும்
மாலையின் முத்தம்
நீலக்காற்றில்
கருப்புக் கோலம்,
கத்தும், கலையும்,
நீளப் பறக்கும்,
ஜோடிக் கால்கள்
கனவைத்தேடி
மணலைப் புரட்டும்
பார்வையில் ஆடும்
பச்சை இலைகள்
பாளைகள் காற்றில்
இச்சென்று மோதவும்
திகைத்துப் பறக்கும்
பெருக்கல் குறிகள்
மனதில் ஆயிரம்
இன்பக் குருவிகள்.