பக்கம் எண் :

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 232

     கோவை ‘வானம்பாடி’ நண்பர்கள் ‘விலைஇலாக் கவிமடல்’ என்று தங்கள் கவிதை
வெளியீட்டை இலவசமாக விநியோகித்து வழி காட்டினார்கள். அதே தன்மையில் ‘A
Pamphlet for Private Circulation Only’ என்ற குறிப்புடன் இலவச வெளியீடுகள் பல
தோன்றிப் பரவின.

     பெருந்துறை இலக்கிய வாசகர் மன்றம் ‘விவேகசித்தன்’ என்ற ‘மனிதாபிமான
இலக்கிய’ இதழைத் தயாரித்து மாதம் தோறும் வெளியிட முன் வந்தது. இலக்கிய தீபன்,
ஓடை துரை அரசன், பொன்கண்ணன், முத்துப்பொருநன், கலையரசு, நீலவண்ணன்
‘ஆசிரியர் குழு’ வாகச் செயலாற்றினார்கள்.

     ‘இலக்கியம் என்பது மொழிப்பற்று, நாட்டுப்பற்று, இனப்பற்று என்கிற குறுகிய
கட்டுக்கோப்புக்குள் சிக்கி விடாமல், இவற்றையெல்லாம் கடந்து நிற்கும் மனித சமுதாயப்
பற்றை மட்டுமே கொண்ட பரந்த மனப்பாங்கிலே முகிழ்க்க வேண்டும்; அது தனிமனித,
சமுதாய நம்பிக்கைகளை வளர்க்க வேண்டும் எல்லோருக்கும் எல்லாம் என்ற நம்பிக்கையை
தனி மனிதனிடத்திலும் ஏற்படுத்த வேண்டும் என்பது விவேகசித்தனின் அவா’ என்ற
அறிவிப்புடன் செயல்பட்டார்கள் இக்குழுவினர்.

     முற்போக்கு இலக்கியக் கொள்கையும், மனிதாபிமான நோக்கும் கொண்ட பலரது
கவிதைகளும் விவேகசித்தன் இதழ்களில் இடம் பெற்றுள்ளன. இவ்வெளியீடு எட்டு
இதழ்களோடு நின்றுவிட்டது.

     பாண்டிச்சேரி இலக்கிய நண்பர்கள் (ராஜரிஷி, மஹாபிரபு, பிரபஞ்ச கவி, சாகித்யன்)
‘ஏன்?’ என்ற இலவச வெளியீட்டைத் தயாரித்து அளித்தார்கள். முற்போக்கு
எண்ணங்களைத் தாங்கி வந்த இக்கவிதை ஏடும் ஆறாவது இதழுடன் நின்று விட்டது.

     திருச்சியிலிருந்து ‘இன்று’ எனும் இலவச வெளியீடு வந்தது. இதுவும் சில
இதழ்களோடு நின்று போயிற்று.

     கோபிச்செட்டிபாளையம் நாகராசன் ‘நாணல்’ என்ற பெயரில் விலையிலா,
இருமாதமொரு முறை. இலக்கிய இதழைத் தயாரித்து விநியோகித்தார். வானம்பாடிக்
கவிஞர்கள் பலரும் எழுதினார்கள்.

     வேலூர் ஊரீசுக் கல்லூரியைச் சேர்ந்த ஐ.சி பழனி பி.அ. தாவீது இருவரும் ‘ஐ’ என்ற
புதுமையான பெயரில் கவிதை மலர் தயாரித்து வெளியிட்டார்கள். அழகான முறையில்
உருவாக்கப்பட்ட இச்சிறு வெளியீட்டில் புதிய சிந்தனைகளை உள்ளடக்கிய ரசமான
கவிதைகள் நிறைந்துள்ளன.

     எனது பார்வைக்குக் கிடைத்த இத்தகைய ஏடுகள் தவிர மற்றும் அநேக வெளியீடுகள்
வந்திருக்கக்கூடும். பொதுவாக சமூக முன்னேற்றத்துக்காக சிந்திக்கும் தார்மீகக் கோபங்
கொண்ட இளைஞர்களின் கனவுகளை, எண்ணங்களை, துடிப்பான உணர்ச்சிகளை
வெளியிடும் சிறு சிறு முயற்சிகளாகவே இவை அமைகின்றன. அநேக சமயங்களில்,
இவற்றில், பெரும்பாலானவை, ஆசைகளின் மலர்ச்சிகளாகவும் வெறும் ஆர்வத்தின்
வெளிப்பாடுகளாகவுமே தோன்றுகின்றன. உண்மையான ஆற்றலின், கவித்திறத்தின்
பரிணமிப்புகளாக அமைவதில்லை என்பதையும் குறிப்பிடத்தான் வேண்டும்.