பக்கம் எண் :

148சாமி சிதம்பரனார்

New Page 1

பழமொழியை விட நாலடியார் சிறந்த நூல் என்பதற்காகவே எழுந்தது.

நாலடியாரைப் பற்றிய இக்கதை கட்டுக் கதைதான். ஆனால்
நாலடியாரின் பெருமையை விளக்கவே இக்கதை பிறந்திருக்க வேண்டும்.
இக்கதையில் உள்ள இரண்டு உண்மைகளை மறுக்க முடியாது. ஒன்று,
நாலடியாரில் உள்ள வெண்பாக்கள் சமண சமயத்தவரால்
செய்யப்பட்டவை. இரண்டு, நாலடியார் ஒரே ஆசிரியரால் இயற்றப்பட்ட நூல்
அன்று; பல ஆசிரியர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு. இந்த இரண்டு
உண்மைகளும் அக்கதையிலிருந்து விளங்குகின்றன.

திருக்குறளிலே உள்ள பல கருத்துக்களை நாலடியாரிலே
காணலாம்.திருக்குறளைப் போலவே நாலடியாரும் மூன்று பால்களாகப்
பிரிக்கப்பட்டிருக்கின்றன. அவை அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால்
என்பவை. துறவறத்தைப் பாராட்டிப் பேசுதல்; உலக இன்பத்தை
வெறுத்துரைத்தல்; பெண்ணின்பத்தை நிலையற்றதென்று மறுத்துப்
பேசுதல்; ஊழ்வினை, மறுபிறப்பு, புலால் உண்ணாமை உயிர்க்கொலை
புரியாமை முதலியவைகளை வலியுறுத்தல்; இவைகள் சமண சமயத்தாரின்
சிறந்த கொள்கைகள். நாலடியாரிலே இக்கொள்கைகள் வலியுறுத்திக்
கூறப்படுவதைக் காணலாம்.

நாலடியாரைத் தொகுத்தவர் பதுமனார் என்னும் புலவர். இவரும் சமண
சமயத்தவர். இவர் நாலடியாரைப் பால், இயல், அதிகாரங்களாக வகுத்தார்.
அதற்கொரு பொழிப்புரையும் இயற்றினார்.

அறத்துப்பாலில் முதலில் துறவறத்தைப் பற்றிய பாடல்களே
தொகுக்கப்பட்டிருக்கின்றன. முதல் அதிகாரம் செல்வம் நிலையாமை;
இரண்டாவது அதிகாரம் இளமை நிலையாமை; மூன்றாவது அதிகாரம்
யாக்கை நிலையாமை.