பக்கம் எண் :

இலக்கணக் கட்டுரைகள்
 
128

இன

    இனி, உயிர்மெய் வடிவு பற்றிய "புள்ளி யில்லா...ஆறே'' (17) என்னும் நூற்பாவுரையிலும்,

    "அருகே பெற்ற புள்ளியை இக்காலத்தார் காலாக எழுதினார். மகரம் உட்பெறு புள்ளியை வளைத்தெழுதினார்'' என்று தம் வழுவைக் கோடிட்டுக் காட்டிவிட்டார். "உருவுதிரிந் துயிர்த்தல்'' என்பது உயிர்மெய் வடிவுகட் குரியதே யன்றி, மகர வடிவிற் குரியதன்று.

     மெய்யின் அளவே அரையென மொழிப, (எழுத்து. 11)
     அவ்வியல் நிலையும் ஏனை மூன்றே. (—  12)
     அரையளவு குறுகல் மகரம் உடைத்தே  
     இசையிடன் அருகும் தெரியுங் காலை (— 13)

என்று முன்வரும் நூற்பாக்களையும்,

     மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல். (— 15)
     எகர ஒகரத் தியற்கையும் அற்றே. (— 16)

எனப் பின்வரும் நூற்பாக்களையும், புள்ளி பெறுதலன்றி ஓரெழுத்திற்கும் தொல்காப்பியர் வடிவு கூறாமையையும் நச்சினார்க்கினியர் நோக்கியிலர்.

    மேலும், மகரவடிவிற்கு அகத்தும் புறத்தும் புள்ளியிடுவது ஏட்டெழுத்திற்கு இடர்ப்பாடான தென்பதையும், பகர வுட்புள்ளியை வளைத்தெழுதும் பகுத்தறிவுகூடப் பண்டைத் தமிழறிஞர்க்கு இல்லா திருந்திருக்காது என்பதையும் அவர் கருதியிலர்.

    இலக்கணப் புலமையில்லாத் தி. நா. சுப்பிரமணியனாரும் மகரக் குறுக்க வடிவு கூறும் நூற்பாவென்று கண்டபோது, நச்சினார்க்கினியர் காணாது போனது ஆனையடிச் சறுக்கலே.

    நச்சினார்க்கினியர் வழுவுரை, தமிழெழுத்துகள் ஏற்கெனவே பன்முறை வடிவு மாறின என்று கூறும் எழுத்துமாற்றக்காரருக்கு, ஒரு போலிச் சான்றாகவும் வாய்த்துவிட்டது.

    மகரக் குறுக்கம் பற்றிய தொல்காப்பிய நூற்பாவும் அதற்கு இளம்பூரணர் உரைத்த வழுவுரையும் வருமாறு:

    உட்பெறு புள்ளி உருவா கும்மே

(தொல். எழுத்து. 14)

    "இது, பகரத்தின் மகரத்திடை வரிவடிவு வேற்றுமை செய்தல் நுதலிற்று.

    "(இ-ள்.) உள்பெறு புள்ளி உருவு ஆகும் - புறத்துப் பெறும் புள்ளியோடு உள்ளாற் பெறும் புள்ளி மகரத்திற்கு வடிவாம். (அஃதின்மை பகரத்திற்கு வடிவாம்.)

    "எ-டு: ப், (ப்) எனக் கண்டுகொள்க. கப்பி, கப்பி (கம்மி) எனவரும்.''