பக்கம் எண் :

இலக்கணக் கட்டுரைகள்
 
29

4

4. ஙம்முதல்

    உலக வழக்கிலுள்ள ஒவ்வொரு மொழியிலும் சொற்களும் சொற் றொடர்களும் நாளடைவில் மாறுபடுகின்றன. அம் மாற்றம் தமிழில் மரூஉ, திரிபு, சிதைவு, போலி எனப் பல்பெயராற் கூறப்படும்.  மொழிகளின் வடிவு மாறவே அவற்றின் முதலிடைகடை யெழுத்துகளும் மாறுபடுகின்றன என்பது சொல்லாமே போதரும்.

    பிறமொழிகளில் மொழிமுதலிடைகடை யெழுத்துகட்கு வரம் பில்லை. தமிழிலோ அவ் வரம்புண்டு. ஒரு தனிமொழியின் அல்லது தனித்து வழங்கக்கூடிய மொழியின் முதலெழுத்து மற்றோரெழுத்தாய்த் திரியின், அத் திரிபெழுத்தே   முதலெழுத்தாய்க் கொள்ளப்படும், இலக்கணம் இடந்தரின்.

     எ-டு: நண்டு - ஞண்டு.

    அரைஞாண் (அரைநாண்), பைஞ்ஞீலி (பைந்நீலி), சேய்ஞலூர்    (சேய்நல்லூர்) முதலிய தொடர்மொழிகளிலுள்ள வருமொழிகள் ஞாண்,  ஞீலி, ஞல்லூர் எனத் தம் திரிந்த வடிவிலும் தனித்து வழங்குந் தகுதி சிறிதுடைமையின் அவற்றின் முதலிலுள்ள திரிபெழுத்துகளும் மொழிமுத லெழுத்துகளாகக் கொள்ளப்படல் கூடும், ஆனால், ஒரு தொடர்மொழியி லுள்ள வருமொழியின் முதலெழுத்து  மொழிமுதலல்லா எழுத்தாகத் திரியின், அவ் விதி முதல் இயல்புமுதலாகக் கொள்ளப்படாது. ஈண்டு இயல்புமுதல் விதிமுதல்  என்பவற்றை இயல்பீறு விதியீறு என்பவற்றை யெண்ணி யுணர்க.

    எ-டு : அல் + தாலம் = அற்றாலம்.
  விண் + நாடு = விண்ணாடு.

    இவற்றில் றா, ணா என்னும் விதிமுதல்கள் மொழிமுதலெழுத்தாகாமை யுணர்க.

    தொல்காப்பியர் சிறந்த ஆராய்ச்சியுடைய ராதலின், ஙகரம் வரு மொழியின் விதிமுதலாய் மட்டும் வருவது கண்டு அதை மொழிமுத லெழுத்தாகக் கூறியிலர். நன்னூலாரோ அவ் வாராய்ச்சியின்மையின், விதிமுதலாய் வந்த ஙகரத்தை இயல்புமுதலென மயங்கிக் கூறினர்.

    ஙகரம் அங்ஙனம், இங்ஙனம், உங்ஙனம், எங்ஙனம், யாங்ஙனம் எனச் சுட்டு வினாமுதற் றொடர்மொழிகளில் வருமொழி விதிமுதலா யிருக்குமே