பக்கம் எண் :

இலக்கணக் கட்டுரைகள்
 
31

அங

    அங்கண், இங்கண் என்பன அங்கன், இங்கன் என மருவி மீண்டும் அங்ஙன், இங்ஙன் என மெலியும்.

    எ-டு : தீர்த்தத் துறைபடிவே னென்றவனைப் பேர்த்திங்ஙன்
 

(சிலப். )

    தமிழ்ச்சொற்கள் பல இன்னோசைபற்றி அம்மீறு பெறுதல் பெரும்பான்மை. (இவ் வியல்பை இலத்தீன் மொழியிலும் காணலாம்.)

     எ-டு : தூண் - தூணம்,
  கால - காலம்,
  புறவு - புறவம்,
  குன்று - குன்றம்,
  நெஞ்சு - நெஞ்சம்,
  கண்டு - கண்டம்.

    இங்ஙனமே அங்ஙன், இங்ஙன் முதலிய மரூஉச் சொற் றொடர்களும் அம்மீறு பெற்று அங்ஙனம், இங்ஙனம் என வழங்கும்.

    ஓரிடம் மற்றோரிடத்திற்கு வழியாயிருத்தல்பற்றிப் பொதுவாய் இடப்பெயர்கள் ஒரு வினை செய்யும் வழியை (அதாவது வகையைக்) குறிப்பதுண்டு.

     எ-டு : ஆங்கு   =  அது போல, அப்படி.
  அவ்வழி  =  அப்படி.

    இவ் வியைபினால் வகைப்பெயர்கள் தடுமாறி இடத்தைக் குறிப்பதுமுண்டு.

     எ-டு : இப்படிப் போ = இவ்வழியாய்ப் போ.

    அங்ஙனம், இங்ஙனம் முதலிய பெயர்களும் சொற்படி முதலில் இடத்தைக் குறித்தனவேனும், பின்பு இடம்-வழி-வகை என்னும் இயைபுபற்றி ஆகுபெயர்த் தன்மையில் வகை, விதம் என்னும் பொருள்  தருவவாயின.

    இனி, அங்ஙனம், இங்ஙனம் முதலிய சொற்றொடர்த் திரிபுகள் அம்மட்டிலமையாது அன்னணம், இன்னணம் முதலிய திரிபுங் கொள்ளும். நன்னூலாரே,

     இன்ன தின்னுழி யின்னண மியலும்

(நன். 460)

எனத் தம் உரியியற் புறனடையிற் கூறியுள்ளார். ஆதலின்,

     சுட்டியா வெகர வினாவழி யவ்வை  
     ஒட்டி ஙவ்வு முதலா கும்மே

(நன். 106)

எனச் சூத்திரித்தவர்,

     சுட்டியா வெகர வினாவழி யவ்வை
     ஒட்டி னவ்வு முதலா கும்மே

எனச் சூத்திரியாதொழிந்தது குன்றக் கூறலாமன்றோ? ஆதலான்,  தொல்காப்பியர்க்கு முற்காலத் தமிழிலன்றிப் பிற்காலத் தமிழில்  ஙம்முதலே யில்லையென்று தெள்ளிதிற் றெளிக.

- ``செந்தமிழ்ச் செல்வி'' கடகம் 1936