பக்கம் எண் :

இலக்கணக் கட்டுரைகள்
 
68

New Page 1
     அவைதாம்  
     குற்றிய லிகரம் குற்றிய லுகரம்  
     ஆய்தம் என்ற  
     முப்பாற் புள்ளியும் எழுத்தோ ரன்ன

(எழுத்து. 2)

என்று சார்பெழுத்து மூன்றையும் "முப்பாற் புள்ளி" யெனத் தொகுத்துப் பொதுப்படக் கூறியதனாலும், அறியப்படும்.

    "முற்கூறிய இரண்டும் உம்மை தொக்குநின்றன" என்று நச்சினார்க்கினியரும், "குற்றியலிகரமும் குற்றியலுகரமும் என்னும் எண்ணும்மை விகாரத்தால் தொக்கன" என்று இளம்பூரணரும் உரைத்திருப்பது பொருந்தாது. உம்மை விரிந்து நிற்பினும் ஆசிரிய யாப்பு வழுவாமை யானும், விரிந்து நிற்பதே இன்னோசை பயத்தலானும், அவை உரையல்லவென அறிக. உரையாயின், தொல்காப்பியம் முன்னொடு பின் முரண்படுதல் காண்க.

     தொல்லை வடிவின எல்லா வெழுத்துமாண்  
     டெய்தும் எகர ஒகரமெய்ப் புள்ளி

(நன். 43)

என்னும் நூற்பாவுரையில், "ஆண்டு என்ற மிகையானே, தாது ஏது என்றற் றொடக்கத்து ஆரிய மொழிகளும், எட்டு கொட்டு என்றற் றொடக்கத்துப் பொதுமொழிகளும், குன்றியாது நாடியாது, எட்டியாண்டுளது என்றற் றொடக்கத்துப் புணர்மொழிப் பொருள் வேறுபாடுகளும் அறிதற் பொருட்டுக் குற்றுகரக் குற்றிகரங்களுக்கு மேற்புள்ளி கொடுப்பாரும் உளரெனக் கொள்க" என்று மயிலைநாதர் அவர் காலத்தும் ஒரு சாராரிடை அவ் வழக்கமிருந்ததாகக் கூறியிருப்பதும் காண்க.

    இனி, பழஞ்சேரநாடான மலையாள நாட்டின் தென்பாகத்தார், குற்றியலுகரத்தின் மேற்புள்ளியிட்டு எழுதி வருவதும் இங்குக் கவனிக்கத் தக்கது.

    இதனால், குற்றியலுகரம் புள்ளி பெறுமென்பதல்லது மெய்யீறென்பது பெறப்படாது. பெறப்படின், எகர ஒகர உயிர்களும் மெய்யெழுத்தென்றாகும்.

     மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்

(தொல். எழுத்து. 15)

   
     எகர ஒகரத் தியற்கையும் அற்றே

(தொல், எழுத்து. 16)

என்று தொல்காப்பியர் கூறுதல் காண்க.

    குற்றியலுகரம் குறுகியும் சாய்ந்தும் ஒலித்தலினாலேயே, வருஞ் சொன் முதலுயிரேற இடங்கொடுக்கும்; அதன் மெய்த்தன்மையினாலன்று, குற்றியலுகரம் இருக்கும் எழுத்து உயிர்மெய்யாதலின், அது உயிரீ றென்பதை உணர்த்தற்கே.

     குற்றிய லுகரமும் அற்றென மொழிப

(எழுத்து. 105)

என மாட்டெறிந்த பின்,