பக்கம் எண் :

இலக்கணக் கட்டுரைகள்
 
72

New Page 1

சேர்க்கப்பெறாதும் போவதுபோல், குற்றியலுகரமும் சீர்நிலைக்கும் தளை வகைக்கும் எழுத்தெண்ணப் பெற்றும், ஐவகையடிகளின் பதினேழ் நிலைவகைக்கு எழுத்தெண்ணப் பெறாதும், தொன்றுதொட்டு இயங்கி வந்திருக்கின்றது. தளைவகைக்கு எழுத்தெண்ணப் பெறாக்கால்.

     முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்  
     தகநக நட்பது நட்பு

(786)

என்னும் குறளும்,

    சீர்நிலைக்கு எழுத்தெண்ணப் பெறாக்கால்

     முந்நீ ருண்டு முந்நீர்ப் பாயும்

(24 : 16)

என்னும் புறப்பாட்டடியும் வழுவாம்.

    இனி, "உகரம் நிறையும்" என்னும் பாடத்தையே கொள்ளினும், குற்றுகரம் முற்றுகர மாகிவிடும் என்று பொருள் கொள்ளற்கிடமில்லை.

     இடைப்படிற் குறுகும் இடனுமா ருண்டே  
     கடப்பா டறிந்த புணரிய லான

(மொழிமரபு. 4)

என்று முன்னர்ப் பொதுப்படக் கூறியதனால், புணர் மொழியகத்துக் குற்றியலுகரமெல்லாம் அரையளபினுங் குறுகிக் காலா யொலிக்குமோ வெனும் ஐயத்தை அகற்றுதற்கே, "உகரம் நிறையும்" எனக் கூறவேண்டிய தாயிற்றெனக் கொள்க.

    குற்றியலுகரப் புணரியல் 4ஆம் நூற்பாவுரையில், "முன்னின்ற சூத்திரத்து உகர நிறையுமென்று பாடமோதி, அதற்கு உகரம் அரை மாத்திரையிற் சிறிது மிக்கு நிற்குமென்று பொருள் கூறி, இச் சூத்திரத்திற்குப் பழைய அரை மாத்திரை பெற்று நிற்குமென்று, கூறுவாரும் உளர்க என்று நச்சினார்க்கினியர் கூறி அம்மட்டோடு விட்டொழிந்தது, இளம்பூரணருரையை மறுக்கவியலாமை பற்றியன்று மறுக்க வேண்டாமை பற்றியே யென்க.

    நாகு என்னும் தனிச்சொல்லின் இறுதியில் வரும் குற்றுகரமே, நாகு கடிது என்னும் தொடர்ச்சொல்லின் இடையும் நேர்கின்றது. அது ஒலியளவில் ஒருகாற் குன்றினும் குன்றுமே யொழியக் கூடுவதிலை. இதுவே தமிழரின் இயல்பான ஒலிப்பாம். இதற்கு மாறாக  நீட்டியொலிப்பது வேண்டுமென்று செய்வதாகவோ வேற்று மொழியாரின் தொடர்பால் நேர்ந்ததாகவோதான் இருத்தல் வேண்டும். அல்லாக்கால் செவிப்புலக் கோளாற்றின் விளைவாயிருக்கலாம்.

    தொடர்ச்சொல்லிடைக் குற்றியலுகரம் ஒலிமிக் கொலிப்பது வெள்ளிடை மலையென விளங்குவதாகப் புலவர் முதுகுன்றனார் கூறியிருப்பது நமக்கு வியப்பாகவேயிருக்கின்றது. வெள்ளிடை மலை யென்னும் தொடரைப் பன்மொழித் தொடர்வகைகளுள் ஒன்றான