பக்கம் எண் :

ஞா. தேவநேயப் பாவாணர்39

45. வடமொழியால் தமிழுக்கு வந்தகேடு
'டம்பனவன் வீடேலம்' என்ற மெட்டு வகை
1
வடமொழியாற் செந்தமிழ்க்கே வந்தகேட்டைச் சொல்வேன்
மடமையற முந்தவற்றை நின்றுகேட்டுச் செல்வீர்.
2
நூலழிவு கலையழிவு நுவலும்மொழி யிழிவு
மேலும்மொழி வளராமை மெய்வரலாற் றழிவு.
3
சொல்லிழிபு சொன்மறைவு சொல்லின்வழக் கழிவு
சொற்பொருளின் மாற்றமொடு சோர்வுபின்னே யொழிவு.
4
தூயபல தென்சொல்வட சொல்லெனவே தோற்ற
ஆயினசொல் வந்தவழி ஐயமொடு மாற்றம்.
5
தமிழ்வளமும் தூய்மையும்போய்த் தன்மைகெட்ட தாலே
தமிழனுக்கும் வறுமைவந்து தாழ்வுமுட்டு மேலே.
6
தமிழனுக்கே முன்பிருந்த தாய்மொழியிற் பற்றே
குமரிமலை சென்றதெனக் குன்றியேபோ யிற்றே.
7
வடமொழியைத் தேவமொழி யென்றுமிக நம்பி
தடமொழியைத் தாழ்த்திவிட்டான் தமிழனே திரும்பி.