பக்கம் எண் :

ஞா. தேவநேயப் பாவாணர்97

108. புலமையில்லாரும் புலவரொடு சொற்பொழிவாற்றல்
பண் - செஞ்சுருட்டி
தாளம் - முன்னை
ப.
அடியார்நின் றாடுகின்ற திருக்கூத்தில் - வந்து
குடிகாரர் ஆடுகின்ற தெருக்கூத்தே.
து. ப.
படியார்தம் பதவியால் செருக்கேற்றித் - தமிழ்
படித்தவருடனும் சொற்பெருக்காற்றே
(அடியார்)
உ.1
கண்ணையே கவர்நீலக் கண்பீலி - மிகக்
காண்வரு தோகையை முன்தான் கோலி
வண்ண நடஞ்செய்கின்ற மயிற்போலி - நிற
வாகில்லாக் கருநட வான்கோழி
(அடியார்)
2
கணக்காயர் பள்ளியிலே ஒரு பாட்டு - வேறு
கல்லாத பேதையுமே தான் கேட்டு
வணக்கமில்லா தவையிற் சொல வேட்டு - மிக
வாய்திறப்பது தீயவிளை யாட்டு
(அடியார்)
3
செந்தமிழ் வரலாறே அறியாது - அதன்
சீரிய இலக்கணம் தெரியாது
எந்த மொழியென் றாய்தல் எமக்கேது - நடு
இருப்பதெம் கருத்தெனல் பெருந்தீது
(அடியார்)
4
நூற்றினுக் கெண்பதுபேர் கல்லாமை - இந்த
நாட்டிற் புகுந்திருக்கும் வல்லாமை
ஏட்டுக்கல்வி யால்அதைக் கொல்லாமை - இன்று
ஆட்சிப் பதவியார்சொல் எல்லாம்மெய்
(அடியார்)