பக்கம் எண் :

72இசைத்தமிழ்க் கலம்பகம்

81. தனித்தமிழிற்பேசாத தமிழாசிரியனின் தகுதியின்மை
பண் - (கானடா)
தாளம் - முன்னை
1
தமிழாசிரிய னென்று தானே அமர்ந்துகொண்டு
               தமிழிற் பேசாதவன் தமிழாசிரியனோ
                                    தமிழா சிறியவனே.
2
தமிழ்ப்புல வோனென்று தான்பெயர் தாங்கிக்கொண்டு
                தமிழிற் பேசாதவன் தமிழ்ப் புலவோனோ
                                    தமிழைப் புலந்தவனே.
3
தமிழில்வல் லானென்று தான்றனைச் சொல்லிக்கொண்டு
                தமிழ்ப் பேசாதவன் தமிழில் வல்லானோ
                                    தமிழிற வல்லாதவன்.
82. செந்தமிழ்ச் செம்மை
(இசைந்த மெட்டிற் பாடுக)
1
உள்ளக் கருத்தை யெல்லாம் தெள்ளத் தெளிவாய் என்றும்
    சொல்லற் குரிய தன்றோ மொழியாகும்
தள்ளத் தகுந்த தில்லை கொள்ளச்சொல் எல்லா மென்னும்
     பிள்ளைத் தனமும் நல்ல வழியாமோ.
2
உண்பது பசிதீர உணவையுட் கொள்ளுவதே
     ஒழுங்கு வேண்டிய தில்லை என்பாரோ
நன்கு பல்லைத் துலக்கி நன்னீரிற் குளித்தபின்
     நாகரிக மாயிருந் துண்பாரே.