பக்கம் எண் :

104ஒப்பியன் மொழிநூல்

இன்னபொருட் கின்ன சொல்லென்று முடிவு செய்ததாகக் கூறும் கூட்டு முடிவுக்கொள்கை(Conventional theory)யும், கடவுளே அமைத்தார் என்னும் தெய்விகக் கொள்கை(Divine theory)யும் இக்காலத்திற் கேலா.

13. இயற்கைமொழியில் இடுகுறிச்சொல் இராது.

சில மொழிகளின் சொற்கள் மூலந் தெரியாதபடி மிகத் திரிந்து போயிருக்கின்றன. பொருளறிய வாராமையால் அவற்றை இடுகுறி யென்றனர் இலக்கணிகள். வடநூலார் இராகங்களுக்கும் பிறவற்றிற்கும் பெயரிடும்போது, அவற் றைத் தமிழினின்றும் பிரித்துக் காட்டவேண்டி இடுகுறிப் பெயர்களை யிட்டனர். இத்தகைய நிலைமைகள் இயற்கை மொழிக்கு நேரா.

“ஒவ்வொரு சொல்லும் பொருள் குறிக்கவேண்டு மென்பது, மாந்தன் பேச்சின் முக்கியமான இலக்கணமாகும். ஒரு மொழியில் ஒலித்திரிபு தோன்றியவுடன், இவ் விலக்கணத்தை அம் மொழி யிழந்துவிடுகிறது” என்று மாக்கசு முல்லர் கூறுகிறார்.1

“எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே”

(தொல். 639)

என்றார் தொல்காப்பியர்.

14. உலக முதன்மொழி தோன்றிய முறையை ஓர் இயற்கை மொழியில்தான் காணமுடியும்.

திரிபு வளர்ச்சியில் மிக முதிர்ந்த சமஸ்கிருதத்தை, இன்றும் சிலர் திராவிடத் தாயாகவும், அதற்குமேலும், உலக முதன் மொழியாகவும் மயங்கி வருகின்றனர். திரிபிற்குச் சிறந்த ஆரியக்குலத்திலுங்கூட அது மிகப் பிந்தியதென்று, சென்ற நூற்றாண்டிலேயே தள்ளிவிட்டனர் மொழிநூல் வல்லார். அங்ஙனமிருக்க, மிக இயற்கையான தமிழுக்கு அது எங்ஙனம் மூலமாகமுடியும்?

உலக முதன்மொழிக்கு நெருங்கிய மொழி, எளிய ஒலிகளையுடையதாய், அசைநிலை முதலிய ஐவகை நிலை களைக் கொண்டதாய், இடுகுறியில்லதாய், தனிமொழியாயி ருத்தல் வேண்டும்.


1. L.S.L. Vol. I, p. 47.