பக்கம் எண் :

பண்டைத் தமிழகம்143

சந்து சதங்கை சழக்காதி யீரிடத்தும்
வந்தனவாற் சம்முதலும் வை”

(எழு. 51)

என்பது நன்னூல் மயிலைநாதர் உரை மேற்கோள்.

சக்கை, சட்டம், சடுதி, சண்டை, சதை, சப்பு, சமன், சமர், சமை, சருச்சரை, சரேல், சல்லி, சலசல, சலி, சவம், சவை, சழி, சள்ளை, சளை முதலிய பல சகர முதற்சொற்கள் செந்தமிழ்ச் சொற்களாதலின், சகரம் தமிழில் மொழிமுதல் வராது என்பது வழுவே.

இனி, சகரக்கிளவிபற்றித் தொல்காப்பியர்மீது வழுவைச் சுமத்தாது, ஏட்டிலிருந்தெழுதினோர்மீது சுமத்துவர் துடிசை கிழார் அ. சிதம்பரனார். அவர் கூறுமாறு :

“க த ந ப ம எனு மாவைந் தெழுத்தும்
எல்லா வுயிரொடும் செல்லுமார் முதலே”

(தொல். மொழி. 28)

“சகரக் கிளவியும் அவற்றோ ரற்றே
அ, ஐ, ஒள வெனும் மூன்றலங் கடையே”

(தொல். மொழி. 29)

“இவ் விரண்டு சூத்திரங்களும் ஆதியில், அதாவது, ஏட்டுச் சுவடியில் இருக்குங் காலத்து, ஒரே சூத்திரமாகத் திகழ்ந்தன.

“சுவடியில் உள்ளபடி ஈண்டுத் தருவாம்:

“க, த, ந, ப, ம எனு மாவைந் தெழுத்தும்
எல்லா உயிரொடும் செல்லுமார் முதலே
சகரக் கிளவியும் அவற்றோ ரற்றே
அவை ஒளஎன்னும் ஒன்றலங் கடையே”

“க் - த் - ந் - ப் - ம் என்னும் ஐந்து மெய்யெழுத்து களும், எல்லா உயிரெழுத்துகளோடும் கூடிப் பெருவரவிற் றாய் மொழிக்கு முதலாக வரும்.

“ச் என்ற மெய்யெழுத்தும் அவ் வைந்து மெய் யெழுத்துகளைப் போலவே, சிறுவரவிற்றாய், எல்லா உயிரெ ழுத்துகளோடுங் கூடி மொழிக்கு முதலாக வரும்.

“ஆனால், க் - ச் - த் - ந் - ப் - ம் என்ற ஆறு மெய்யெழுத்துகளும் ஒளஎன்னும் உயிரெழுத்தோடுங் கூடி மாத்திரம் மொழிக்கு முதலாக வரா” என்பதாம்.