4. ஐம்பாற் சுட்டுப்பெயர் - படர்க்கைப்பெயர்
ஆ - அவ். ஈ - இவ். ஊ - உவ்.
சேய்மை (1) அவன் அவள் அவர் அது (.> ஆது
) அவை.
அண்மை (2) இவன் இவள் இவர் இது (< ஈது)
இவை.
இடைமை (3) உவன் உவள் உவர் உது (> ஊது )
உவை.
முதலாவது சுட்டுப்பெயர்களும்
வினாப்பெயர்களும் நெடின் முதல்களாகவே
வழங்கிவந்தன. பின்பு குறின் முதல்களாகக் குறுகின.
குறுகினவை கு, து, ம், ல், வ், ன் என்ற ஆறீறுகளைக்
கொண்டிருந்தன.
எ-டு : அகு , அது, அம், அல், அவ், அன்.
இவற்றுள் து, வ் என்ற ஈற்றுச்
சொற்களே ஐம்பாற் சுட்டு வினாப் பெயரடிகளாகக்
கொள்ளப்பட்டன.
ஆ ஈ ஊ ஏ என்ற சுட்டு வினாவேர்களே,
முதலாவது பாலெண்ணுப் பொதுப்பெயர்களாக
வழங்கிவந்தன. (இவ் வியல்பை இன்றும் இந்தி
போன்ற வடநாட்டு மொழியிற் காணலாம்). பின்பு,
ஒருமை விலக்கிப் பன்மைக்கு மட்டும் அவை
வரையறுக்கப்பட்டன. இவ் வியல்பை அவை வகரமெய்
யீறாகக் குறுகிய விடத்தும் அல்லது வேறெழுத்தாய்த்
திரிந்தவிடத்தும் காத்துக்கொண்டன.
எ-டு: ஆ - அவ் = அவை. ஏ - எவ் = எவை. ஆ- அ =
அவை (பன்மையீறு).
வகரமெய் யீற்றுச் சொற்கள்
பின்வருமாறு திரிந்தன:
ஆ - அவ் - அவ - அவை
ஈ - இவ் - இவ - இவை
ஊ - உவ் - உவ - உவை
ஏ - எவ் - எவ - எவை.
இங்ஙனம், து, வை என்ற அஃறிணை யிருபா
லீறுகளும் இயல்பாய்த் தோன்றின. ன், ள், ர் என்ற
உயர்திணை யீறுகளைப்பற்றிப் பல்வேறு
கொள்கைகளுள. கூ (Ku)
மொழியில் வழங்கும் ஆனு (ஆடவன்), ஆலு (பெண்டு)
என்னும் பெயர்களே, முறையே, ஆண்பால் பெண்பா
லீறுகளாகத் திரிந்தன வென்று கொண்டனர்
கால்டுவெல். தமிழிலுள்ள ஆண் ஆள் (பெண்) என்னும்
பெயர்களே முறையே, ஆண்பால் பெண்பால் ஈறுகளாகத்
திரிந்தன வென்று கொண்டு, ’அ - ஆண்’ < அவன், ’அ -
ஆள்’ < அவள் என்று காட்டுவர் ஞானபிரகாச அடிகள்.
இது பொருத்தமானதே. ஆனால், அஃறிணை யீறுகளைப்
போன்றே உயர்திணை யீறுகளும் இயல்பாய்த்
தோன்றியவாகக் கொள்வதே மிகப் பொருத்தமென்று
தோன்றுகின்றது. யாம் நாம் என்னும் தன்மைப்
பெயர்கள் தனியும் உளப்பாடுமாகவும், எது யாது
என்னும் வினாப்பெயர்கள் அறிபொருளதும் அறியாப்
பொருளதுமாகவும் வெவ்வேறு பொருட்குப்
பயன்படுத்தப்பட்டாற் போல,’ன்’, ’ள்’, ’ர்’ என்ற
இயல்பான ஈறுகளும் வெவ்வேறு பாற்குப்
பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.
|