பக்கம் எண் :

தமிழ்நாட்டு அரசின் கடமை103

துறவு (சந்நியாஸம்) என நால்நிலையாக வகுத்து விட்டனர். இது எவ் வகையிலும் இடர்ப்பாடின்றி இனிதாக வாழும் முறைமையாகும். தமிழத் துறவு மணந்தும் மணவாதும் நிகழும்.

  தமிழ முறைப்படி, பார்ப்பான் என்பது இல்லறத்தானையும், அந்தணன் என்பது துறவறத்தானையும் சிறப்பாகக் குறிக்கும். பிராமண வாழ்க்கையின் நால்நிலைகளுள் இல்வாழ்வு ஒன்றாதலால், பார்ப்பான் என்னும் பெயரும் அந்தணன் என்பதுபோலப் பிராமணர்க்கே யுரியதாயிற்று.

பிராமணத்துறவு

"மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்க
லுற்றார்க் குடம்பு மிகை" (குறள். 345)

என்று கொள்ளும் உயரிய நிலையதன்று. நூல் செம்பு முக்கோல் மணை தாங்கலும், ஆவும் பொன்னும் பெறலும், பிராமணர் வீட் டிலேயே உண்ணுதலும், முற்றத் துறவுக்கு முற்றும் முரணாம்.

  தமிழர் அந்தணர் வகுப்பினின்று தள்ளப்பட்டதனால், அரசர் வணிகர் வேளாளர் என்னும் மூவகுப்பினராகவே அவர் சொல்லப்பட்டும் எழுதப்பட்டும் வந்தனர்.

  வேளாளர் நிலைமைபற்றியும் நிறம்பற்றியும் வெள்ளாளர் (வெண்களமர்), காராளர் (கருங்களமர்) என இருவகுப்பாகப் பிரிந்தனர். முன்னவர் உழுவித்துண்பார், பின்னவர் உழுதுண்பார். வெள்ளாளர் தம் இழிவைச் சற்றுப் போக்கக் கருதிச் சற்சூத்திரர் என்று தம்மைச் சொல்லிக் கொண்டனர். இது பிராமணன் மதிப்பீட்டை ஒருசிறிதும் மாற்றவில்லை.

  குலவேற்றுமை வரவரக் கடுமையாகிவிட்டதனால், பிராமணரை நோக்கி, தீண்டுவார், தீண்டாதார், அண்டாதார், காணாதார் எனத் தமிழர் நால்வகைப்பட்டுவிட்டனர். தீண்டுவார் அரசர் போன்றவர்; தீண்டாதார் தீண்டாது அண்டியே நிற்கும் வணிகர்போல்வார்; அண்டாதார் அண்டாது தொலைவில் நிற்கும் மள்ளரும் (பள்ளரும்) பாணரும் போல்வார்; காணாதார் மலையாள நாயாடிகள் போல்வார்.

  அரசர் பிராமணரைத் தீண்டினாரேனும், அச்சத் தோடேயே செய்தாரென்பது, ஆரியப்படை கடந்த நெடுஞ் செழியன் வார்த்திகன் சினத்தைத் தணிக்க அவன் காலில் விழுந்து கும்பிட்டானென்று, இளங்கோவடிகள் கூறியிருப்பதினின்று உய்த்துணரலாம்.