பக்கம் எண் :

106மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை

அகமணத்தின் (endogamous) தீங்கை ஏற்கெனவே தமிழர் அறிந்திருந்தமையைக் காட்டும்.

  6. தமிழ்ப் பகைவனான அயலானுக் கிடங்கொடுத்தல்.

  ஒரு பதவிபற்றி இரு தமிழர் பிணங்கிப் போராடி ஒருவரும் விட்டுக்கொடாது ஒட்டாரஞ் செய்யின், அப் பதவியை அயலா னொருவன் பெற நேர்ந்துவிடுகின்றது.

  7. தாய்மொழிப் பற்றின்மையும் தமிழப் பிறப்பிழிபும்.

  8. பகுத்தறிவு, தன்மானம், நெஞ்சுரம் ஆகிய அகக்கரணப் பண்பிழப்பு.

  திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே ஆரிய வொழுக்க முறையின் தீங்கை யுணர்ந்து,
 

"பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா
 செய்தொழில் வேற்றுமை யான். " (குறள். 972)

"ஒழுக்கம் உடைமை குடிமை யிழுக்கம்
 இழிந்த பிறப்பாய் விடும்." (குறள். 132)

"அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
 செந்தண்மை பூண்டொழுக லான்" (குறள். 30)
என்று தமிழரை எச்சரித்தார். ஆயின், ஆங்கிலத்தையும் இக்கால அறிவியலையுங் கற்றபின்பும் தமிழன் தன் அடிமைத் தனத்தையுணராது, என்றும் பிறப்பில் தன்னை இழிந்த வனாகவே கருதிக் கொண்டிருக்கின்றான். இவ் விழிபுணர்ச்சி இன்னும் நூற்றுமேனி நாற்பதின்மரிடம் உள்ளது.

  இதைக் களையாவிடின் இன்னும் பல தலைமுறைகள் தொடரும். ஆரியக் குலப்பிரிவினையால் ஏற்பட்ட தீங்குக ளெல்லாவற்றுள்ளும், மிகக் கேடானது தமிழினத் தாழ்வுணர்ச்சியே. பிற நாடுகளிற் பிறப்பாற் சிறப்பின்மையையும், ஆங்கில நாட்டிற் பொதுமக்களும்
(Commons) பெருமக்களாக (Lords) வுயர்வதையும், கண்ணாரக் கண்டுங் காதாரக் கேட்டும் திருந்தாதிருப்பவன் தமிழனாகான்.
கெடுக வுள்ளம் கேடிவன் கொள்கை
தமிழன் எனவே தகவெதும் இலனே
உலக முதற்றாய் உயர்தனிச் செம்மொழி
தமிழென விளக்கினுந் தாழ்மொழி யென்பான்
பொன்னார் மேனிப் பொலிமுகம் வாய்ந்து