பக்கம் எண் :

144மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை

ஆட்சி மொழியாகவும் தீர்மானித்தற்கு அடிகோலிற்று. காந்தியடிகள் ஆங்கிலரை விரைந்து இந்தியாவினின்று அகற்றுதற்கேயன்றி, இந்தியாவிற்கு நன்மை பயக்கும் பொது மொழியைத் தீர்மானித்தற்கு ஆற்றல் வாய்ந்தவரல்லர். அவருக்குக் குசராத்தி ஆங்கிலம் ஆகிய இருமொழியே தெரியும்.
 
   1774-ல் வங்கநாட்டு இராதா நகரத்திற் பிறந்து, 1833-இல் ஆங்கிலநாட்டுப் பிரித்தல்
(Bristol) நகரத்தில் இறந்த இராசாராம் மோகன்ராய் வங்கம், சமற்கிருதம், பாரசீகம், அரபி, ஆங்கிலம், கிரேக்கம், எபிரேயம் ஆகிய எழு மொழிகளில் வல்லுநராயும் நாட்டுப்பற்றும் நடுநிலையும் பகுத்தறிவும் பரந்தநோக்கும் விஞ்சிய ஆண்டகையும் பெருந்தகையுமாயும் இருந்து, இந்தியர் ஆங்கில அறிவின் வாயிலாகவே விடுதலையும் முன்னேற்றமும் பெற முடியு மென்று கண்டு, ஆங்கிலக் கல்வியை இந்தியாவிற் பரப்புவதற்கு வேண்டிய ஏற்பாடுகளையெல்லாம் செய்தார். மொழித்துறையில் அவர் கொள்கையே இந்தியர் பின்பற்றத்தக்கது.
 
   1885-ல் தோற்றுவிக்கப்பட்ட இந்தியத் தேசியப் பேராயம் 1921லேயே ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கியிருந்தாலும், 1947-ல் திடுமென்று ஆங்கில அரசு இந்திய விடுதலையளித்தது, பண்டித நேருவிற்கு ஓரளவு வியப்பையும் மருட்சியையும் விளைத்தது. உள்நாட்டு அரசரெல்லாம் அஞ்சியொடுங்கினர்; சென்னை மண்டல நயன்மைக் கட்சித்
(Justice Party) தலைவரெல்லாம் ஓடியொளிந்தனர். பேராயத்திற்கு இம்மியும் எதிர்ப்பில்லை. விடுதலையடைந்தவுடன் பேராயம் கலைக்கப்பட வேண்டு மென்றும், அனைத்திந்தியப் புதுப் பொதுக்கட்சி யொன்று தோன்றியாள வேண்டுமென்றும், காந்தியடிகள் கூறியது கைவிடப்பட்டது. பேராயம் ஆட்சியேற்று அரசியலமைப் பவையையும் (Constituent Assembly) அமைத்தது. ஆட்சி மொழித் தீர்மானக்குழு வுறுப்பினர் அனைவரும் பேராயத்தாரே. அவருட் பலர் இந்தியர். ஆயினும், ஆங்கிலச் சார்பினரும் இந்திச் சார்பினரும் சரிசமமாயிருந்தனர். நேரியெடுப்பு மும்முறை நிகழ்ந்தது. மும்முறையும் சரிசமமே நின்றது. குழுத்தலைவராயிருந்த இராசேந்திரப் பிரசாது நடுநிலை தவறித் தம் இடுநேரியைச் சேர்த்து இந்திக்கு வெற்றி யுண்டாக்கினார்.