தி.மு.க. அல்லாத கட்சிகளைத் துணைக்கொண்டு தமிழ் நாட்டில் மீண்டும் இந்தியைப் புகுத்தச் சமையம் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
4. ஆங்கிலம் அயன்மொழியன்மை
இற்றை யிந்தியருள் ஒரு வகுப்பாரான சட்டைக்காரர் என்னும் ஆங்கில இந்தியர் பத்திலக்கவர் உள்ளனர். அவர் தாய்மொழி ஆங்கிலம். ஆதலால், இந்திய அரசியலமைப்பில் 8ஆம் பட்டியலில் ஆங்கிலம் தொடக்கத்திலேயே சேர்க்கப் பட்டிருத்தல் வேண்டும். அங்ஙனஞ் செய்யப்படாமை அரசிய லமைப்பாசிரியரின் நேர்மையின்மையையும் அறிவுக் குறைவையுமே காட்டுகின்றது.
சமற்கிருதம் வழக்குமொழியன்று. அதிற் பேசக்கூடிய பண்டிதர் ஈராயிரவரே. அவர் மனைவியரும் மக்களும் அதிற் பேசார். பதினைந்தாண்டு வருந்திக் கல்வி கற்றவரே அதிற் பேசமுடியும். வழக்கு மொழியென்பது, பிள்ளைகள் கல்வி கற்காமலே பெற்றோரைப் பின் பற்றித் தாமாகத் தம் பிள்ளைப் பருவத்திற் பேசக் கற்றுக்கொள்வது. பல்லாண்டு கல்விகற்றுப் பேசுவதாயின், ஒருவன் எந்த வழக்கிறந்த மொழியையும் செயற்கை மொழியையும் பேசலாம். ஒருகாலும் பேசப்படாததும், இலக்கிய மொழியாகவே வளர்க்கப்பட்டதுமான, சமற்கிருதத்தை, 8ஆம் பட்டியலிற் சேர்த்ததும் நேர்மையின்மையைக் காட்டுகின்றது. செய்யத் தக்கதைச் செய்யாமல் விட்டுவிடுவதினும் பிந்திச் செய்வது மேல் (Better late than never). இந்திய மொழிகளுள் ஒன்றாயிருக்கும் ஆங்கிலத்தை உடனே 8ஆம் பட்டியலிற் சேர்த்தல் வேண்டும்.
ஆங்கிலம் இன்று ஆங்கிலரின் சொந்த மொழியன்று. 14ஆம் நூற்றாண்டிலிருந்து 16ஆம் நூற்றாண்டுவரை கிளர்ந்த மறுமலர்ச்சிக் (Renaissance) காலத்தில், இலத்தீன் மொழியினின்றும் கிரேக்க மொழியினின்றும் ஆயிரக்கணக்கான சொற்கள் ஆங்கிலத்தாற் கடன் கொள்ளப்பட்டன. 16ஆம் நூற்றாண்டின் பின் கலப்படை வலிமையால் ஆங்கிலர் உலக முழுதும் சுற்றி மூன்றிலொரு பாகத்தைக் கைப்பற்றியாண்டதனால், உலகெங்கும் வழங்கும் பன்மொழிச் சொற்கள் ஆங்கிலத்திற் கலந்தன. அதனால், இன்று ஆங்கிலச் சொற்களுள், 80/100 கிரேக்க விலத்தீனம்; 10/100 தமிழுட்பட்ட பிற அயன்மொழிகள்; 10/100 மட்டும் ஆங்கில சாகசனியம் (Anglo - Saxon) . ஆதலால் ஆங்கிலம் உலகப் பொதுமொழியே யன்றி ஆங்கிலர்க்கு மட்டும் சிறப்பாக வுரியதன்று.