அரசினர் விருந்துகளிலெல்லாம், குலம்பற்றிய எவ்வகை யுணர்ச்சிக்கும் இடந்தருதல் கூடாது. துப்புரவு, ஒழுக்கம், கல்வி, செல்வம், பதவி, அதிகாரம், அறிவு, ஆற்றல் முதலியவற்றாலன்றிப் பிறப்பால் ஒருவர்க்கும் ஒரு சிறப்பும் இருத்தல் கூடாது. ஐரோப்பிய நாடுகளிற் போன்றே மக்கள் ஓரினமாய் வாழ்தல் வேண்டும். 3. கல்வியும் ஆட்சிமொழியும் உறுப்பு நாடுதொறும் மக்கள் மொழியாலும் மதத்தாலும் பழக்க வழக்கங்களாலும் வேறுபட்டிருப்பதால், கல்விப் பொருட்டுறை, உடனொத்த பட்டியலில் (Concurrent list) இராது நாட்டுப் பட்டியலிலேயே இருத்தல் வேண்டும். இற்றைக் கல்வியெல்லாம் அறிவியலும் கம்மியமுமாக இருப்பதனாலும், இவை மேனாடுகளிலேயே தோன்றி வளர்ந்து வருவதனாலும், இவற்றைச் சிறப்பாகவும் எளிதாகவும் நாம் கற்கக்கூடிய மொழி ஆங்கிலமேயாதலாலும், காந்தியடிகளும் நேருவும் இந்தியாவில் மட்டுமன்றி இங்கிலாந்திலும் ஆங்கில வாயிற் கல்வி கற்றதனாலேயே அவர் நிலைமை யடைந்தனராதலாலும், ஆங்கிலத்தினால் அளவிறந்த நன்மையே யன்றி இம்மியுந் தீமையில்லையாதலாலும், இந்தியா அதன் வாயிலாகவே முன்னேறவியலுமாதலாலும், நடுவணரசு கல்வியும் அடிமுதல் முடிவரை ஆங்கிலத்திலேயேயிருத்தல் வேண்டும். ஆங்கிலத்திலுள்ள அறிவுநூல்களெல்லாம் இந்தியா வெங்கும் விலைக்குக் கிடைத்தல் வேண்டும். ஆங்கில எழுத்தொலியும் சொற்பொருளும் சொற்றொட ரமைப்பும்பற்றி இந்திய ஆங்கிலப் பேராசிரியர் அடிக்கடி கருத்து வேறுபடுவதால், இந்தியப் பல்கலைக்கழகங்களிலெல்லாம் ஆக்கசு போர்டுப் பல்கலைக்கழகம் விடுக்கும் ஆங்கிலேய ஆங்கிலப் பேராசிரியரை ஆங்கிலத்துறைத் தலைவராக அமர்த்துதல் நன்றாம். ஆட்சி மொழி ஆங்கிலத்தின் தனிப்பெருஞ் சிறப்பும் இன்றியமையாமையும் முன்னரே கூறப்பட்டுவிட்டன. ஆங்கிலத்தை யகற்றி அதன் இடத்தில் இந்தியைப் புகுத்துவதற்கு யாதொரு தகுதியும் கரணியமுமில்லை. ஆயினும், இந்திவெறியர், "வலிமைக்கு |