பக்கம் எண் :

2மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை

முதன்மொழியாகத்   தோன்றுவதனாலும்,  ரிச்சார்டு   லீக்கி  (Richard Leakey) என்னும் பிரித்தானிய  மாந்தனூலாராய்ச்சியாளர் தென்னாப்பிரிக்கக்  கீழ்கரை  நாடுகளையே மாந்தன் பிறந்தகமாகக் கூறுவதனாலும்,குமரிமலை நாடே தமிழன் பிறந்தகமும், தென் குரங்கன் (Australopithecus),  கற்கருவி மாந்தன்   (Homo habilis), நிமிர்மாந்தன் (Homo erectus) ,  மதிமாந்தன்   (Homo sapiens)  என்னும்  நால் நிலையனாகச் சொல்லப்படும்  மாந்தன்  தோன்றிய  இடமுமாகுமென்று கொள்ளப்  பெரிதும் இட முண்டாகின்றது.
 
   கி.மு. 4ஆம் நூற்றாண்டில் வடநாட்டினின்று  வந்து  வைகை  மதுரைச்  சுற்றுச் சார்பிலுள்ள குன்றுகளில் வதிந்த சமணத் துறவியர், அங்குள்ள பாறைகளில் தமக்குத் தெரிந்த  பிராமி  யெழுத்தில்  தமக்குத்  தோன்றியதை அல்லது தாம் அறிந்ததைப் பொறித்து வைத்ததினின்று, அன்று வழங்கிய தமிழெழுத்தைப் பற்றி ஒரு முடிபிற்கும் வந்துவிட முடியாது.
 
   பனைமரம்  தமிழகத்துக் குறிஞ்சி முல்லை நிலங்களில் தொன்றுதொட்டு    இயற்கையாகவுஞ்  செயற்கையாகவும் வளர்ந்து வருவது.  கடிதங்கள், திருமுகங்கள், நாளோலைகள், வரவுசெலவுக் கணக்குகள்,முறிகள், தீட்டுகள்,   ஒப்பந்தங்கள், ஆவணங்கள், வணிகப்பட்டியல்கள், கைச்சாத்துகள், சுவடிகள், பொத்தகங்கள் ஆகியவையெல்லாம்  பனையேட்டில்  எழுதப்  பட்டு வந்தன. வளை கோடுமிக்க வட்டெழுத்துத்தான், பனை யேட்டில் எழுத்தாணி கொண்டு ஏந்தாகவும் (வசதியாகவும்) இடக்கருவிச்  சேதமின்றியும்  எழுத வொண்ணும். நேர்கோடு மிக்க வெட்டெழுத்தே, கல்லுஞ் செம்பும் போன்ற கடினப் பொருள்மேல் உளியாற் பொறித்தற்கு ஏற்கும்.
 
   வடமொழி  முதலில்  எழுதப்பட்ட  கிரந்தவெழுத்து, தமிழெழுத்தின்திரிபே. கிரந்தவெழுத்தின்   திரிபு  வளர்ச்சியே   தேவநாகரி.  அது கி.பி. 4ஆம் நூற்றாண்டில் அரும்பி, 8ஆம்  நூற்றாண்டிற்  போதாகி, 11ஆம் நூற்றாண்டில் மலர்ந்ததாக, மானியர் உவில்லியம்சு  தம்  சமற்கிருத ஆங்கில  அகரமுதலி முன்னுரையிற்  குறிக்கின்றார் (ப.28, அடிக்குறிப்பு). தேவநாகரி என்னும் பெயரே, தேவன், நகரம் என்னும் இரு தென்சொற் கூட்டின் திரிபென்பதை அறிதல் வேண்டும்.
 
   ஆரியப்  பூசாரியர்  தென்னாடு  வந்ததிலிருந்து,  தமிழ் ஒரு வகையிலும் வளர்ச்சி  பெறாது,  எல்லா  வகையிலும்  படிப்படியாய்த்  தளர்ச்சியுற்றே  வந்திருக்கின்றது. கடைக்கழகக் காலத்திலேயே மூவேந்தரும் ஆரிய அடிமைத்தனத்துள் அமிழ்ந்து