மகத்தீர்ப்பரை இது அடக்கியாள முடியாது. ஆயினும் நடை முறையில் மாபெரு வலிமையுள்ளது; பொதுமக்கள் கருத்திற்கு விடப்பட்ட செய்திகளை யெல்லாம் முன்னாய்வு செய்தது; மகத்தீர்ப்பர் பணியாற்ற வழிகாட்டிற்று; ஒரு மகத்தீர்ப்பரைப் பணியினின்று நிறுத்திவைக்கவும், தனிப்பட்ட வரைச் சட்டப் பிணிப்பினின்று தவிர்க்கவும், போரியற் சட்டம் (martial law) பிறப்பிக்கவும் உரிமை கோரிற்று; சட்டஞ் செய்வதிலுள்ள குற்றங்குறைகளை எடுத்துக்காட்டித் திருத்தியது; பேரவைகளும் மகத்தீர்ப்பரும் தாம் தமித்துச் செய்ய அதிகாரம் பெற்ற வினைகளிலும் இதன் கருத்திற் கிணங்க நேர்ந்தது.
இங்ஙனம், பொதுமக்களால் நேரடியாக ஆளப்படாததனால் குடியரசல்லாமலும், அரசனை நீக்கியதனால் மக்களாட்சி யாகவும் இருந்த உரோமவரசு, தன் வலிமையால் நாளடைவில் முக்கண்ட நாடுகளைக் கொண்ட பேரரசாக வளர்ந்து, இறுதியிற் பேரகன் பரப்பினாலும் முற்றதிகாரியாக மாறிய ஒற்றை மாந்தனின் தன் மூப்பாட்சியாலும், குலைந்து சிதைந்து போயிற்று; இன்று தனித் தேயநாடாக இருந்து வருகின்றது.
3. ஆங்கில நாட்டரசு
அரசனின் வலிமையைப் படிப்படியாக அடக்கி, பெரும்பான்மைப் பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவன், தன்போல் தேர்ந்தெடுக்கப்பட்ட துணைவருடன் கூடி, பழமை போற்றியர் (Conservatives), தாராளிகர் (Liberals), உழைப்பாளியர் (Labourers) என்னும் முக்கட்சிப் பொதுமக்களின் படிநிகராளியர் (representatives) அவையும், (House of commons), அரசனால் அமர்த்தப்பெற்ற பெருமக்கள் அவையும் (House of Lords) சேர்ந்த நாடாளு மன்றத்தின் (Parliament) பெரும்பான்மை யிசைவுபெற்று, நேர்மையாக ஆண்டுவரும் ஆட்சி, பிரித்தானியா என்னும் ஆங்கில நாட்டிற்குச் சிறப்பாகவுரியதாகும். இது அரசுவகையில் நாடாளுமன்றக் கோவரசு (Parliamentary Monarchy) எனப்படும். பெயரளவிற் கோவரசாயினும், நடை முறையிற் குடியரசே.
உலக முழுவதிலும் குடியுரிமையுணர்ச்சி விஞ்சிய நாடு ஆங்கில நாடே. உரிமையுணர்ச்சி போன்றே அரசப்பற்றும் அந் நாட்டிற்குச் சிறப்பாகும்.
பொதுமக்கள் அவை (House of Commons) உறுப்பினர், சராசரி 57,000 பேருக்கு ஒருவராக 18 அகவைக்குக் குறையாத