பக்கம் எண் :

38மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை

ஆதலால், பாத்துண்டலை அடிப்படையாகக் கொண்ட கூட்டுடைமை யாட்சியே, இந்தியா போன்ற மக்கட்பெருக்க வறுமை நாட்டிற்கு ஏற்றதாம்.


4. வள்ளுவர் கூட்டுடைமையின் தனிச்சிறப்பு

1. எல்லார்க்கும் ஏற்றது

  காரல் மார்க்கசு தம் கூட்டுடைமைக் கொள்கையைத் தொழிலாளர்க்கென்றே வகுத்தார். இரசிய சீனநாடுகளின் கூட்டுடைமை யாட்சியிற் கைத்தொழிலருங் கல்வித்தொழிலருமான எல்லா வகுப்பினரும் வாழினும், தொழிலாளர் கையிலேயே அதிகாரம் அமைந்துள்ளது. அவ்விரு நாடுகளையும் தழுவியுள்ள இந்தியக் கூட்டுடைமைக் கட்சிகளும், தொழிலாளர் ஒன்றியங்களாகவே இயங்கி வருகின்றன.
  இன்று இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டத்தால் தாக்குண்டவர் தொழிலாளர் மட்டுமல்லர்; பல்லாயிரக்கணக்கான பொறிவினைஞரும் மருத்துவரும் ஆசிரியரும் பிறரும் ஆவர். ஆதலால், கூட்டுடைமையாட்சி கற்றோரும் மற்றோரு மான அனைவர்க்கும் பொதுவானதே.

2. ஈகையாளர்க்கும் புதுப்புனைவாளர்க்கும் தமிழ்ப் புரவலர்க்கும் கல்விவள்ளலர்க்கும் செல்வ வரம்பிடாதது

  சிலர்க்குப் புதுப்புனைவாற்றலோ புதுச் செய்முறை கண்டு பிடிப்பாற்றலோ இருக்கலாம். அவர் விருப்பப்படி விட்டுவிடின், அவ் வாற்றலை மேன்மேலும் வளர்த்துப் பெரும் பொருளீட்ட வழியுண் டாகும். பெரும்பயன் விளையும். அதனால் அவருக்கும் கஆடு கொழுத்தால் ஆயனுக்கு ஊதியம் என்பதை உணர்த்தல் வேண்டும்.

  மேனாடுகளில், சிறப்பாக வடஅமெரிக்காவில், பல்வேறு சூழ்ச்சியப் பொறிகளைப் புதுப்புனைந்தவர்க்கு அரசு உரிமை யளித்து ஊக்கியதனால், அவரும் செல்வத்திற் சிறந்தோங்கினர்; அவர் நாடுகளும் செழித்துப் பொருள்வளங் கொழித்தன; கொழிக்கின்றன.

  இங்கே இந்தியாவில் அதற்கு நேர்மாறாக நேர்ந்துள்ளது, கோவைக் கோ. துரைசாமி நாயக்கரை
(G.D. Naidu) நடுவணரசும் ஊக்கவில்லை; நாட்டரசும் ஊக்கவில்லை. அவரை ஊக்கி யிருந்தால், உலக முழுவதற்கும் பயன்படும் ஓர் எடிசனாகியிருப் பார். நடுவணரசு, அவரை ஊக்குவதற்கு மாறாக, அன்முறை