"செவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்." (குறள். 402)
அறிஞர் சொற்பொழிவைக் கேட்டு அறிவுபெற வாய்ப் பில்லாத போது, வயிற்றுப்பாட்டையுங் கவனிக்கலாம்.
ஒருவன் அறிவடைவதோடு தன் மொழியைத் திருத்த மாகவும் பேசுதல் வேண்டும். இரசிய மொழியைத் திருத்தமாய்ப் பேசுவதே இரசியர் விருப்பம். அங்ஙனமே, சீனமொழியைத் திருத்தமாய்ப் பேசுவதும் சீனர் விருப்பம்.
உலகமொழிகளுள் தலைமையானது தமிழ். அது உலக முதற்றாய், உயர்தனிச் செம்மொழி; திரவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமுமாயிருப்பது; பிறமொழிச் சொற் கலவாத தூய்மையை உயிர்நாடியாகக் கொண்டது. ஆதலால் அதைத் தூய்மையாகப் பேசுதல் வேண்டும்.
மொழியின் பயன் கருத்தறிவித்தல்தானே! அதை எப்படிப் பேசினா லென்ன என்று வினவுவது, உண்ணுதலின் பயன், பசியைப் போக்குதல்தானே! எப்படியுண்டாலென்ன? (சமைக்கவும்) பல் துலக்கவும், குளிக்கவும், துப்புரவான இடத்தில் அமரவும், இலையில் அகப்பையால் வெவ்வேறாகப் படைக்கவும், ஒவ்வொன்றாக உண்ணவும் வேண்டுமோ? சமைத்த கலத்திற்குள் கையை விட்டே எடுத்துண்ணலாமே! என்று வினவுவது போலிருக்கின்றது. பல வினைகள் இருதிணைக்கும் பொது; ஆயின், செய்யும் முறை வெவ்வேறு. உயர்திணை மாந்தன் எவ் வினையையும் நாகரிகமாகவும் பண்பாட்டுடனுஞ் செய்தல் வேண்டும்.
இனி, வயிறு கொதிக்கும்போது தமிழ் எதற்கு? தமிழ் வந்து வயிற்றை நிரப்புமா? என்று வினவும் மாந்தன் வடிவுகளும் உள. அத்தகைய மாக்களை நோக்கித்தான்,
"செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்?" (குறள். 420)
என்று வெகுண்டு வினவுகின்றார் திருவள்ளுவர்.
செவிவாயிலாகச் சிறந்த சொற்பொழிவுகளின் சொற்சுவை