பக்கம் எண் :

வள்ளுவர் கூட்டுடைமை53

புனல்யா றன்றிது பூம்புனல் யாறென
அனநடை மாதரும் ஐயனுந் தொழுது
பரிமுக வம்பியும் கரிமுக வம்பியும்
அரிமுக வம்பியும் அருந்துறை யியக்கும்
பெருந்துறை மருங்கிற் பெயரா தாங்கண்
மாதவத் தாட்டியொடு மரப்புணை போகித்
தேமலர் நறும்பொழில் தென்கரை யெய்தினர்.’’

(சிலப்.13 : 170-80)

  இன்று கோடைமழை, மாரிமழை, அடைமழை ஆகிய முக்கால மழையுந் திறம்பியதொடு, துளிப்பனியும் வறட்பனியாக வறந்துவிட்டது. இதனாற் பாசனநீர்க் குறைவு மட்டுமன்றிக் குடிநீர்த் தட்டும் ஏற்பட்டுவிட்டது.

  நெல்விளைவு மிகக் குன்றிவிட்டதனால், பண்பாடு கெடு மளவு திருமண விருந்துக் கட்டுப்பாடும் புகுத்தப்பட்டுவிட்டது.

  ஓர் உழைப்பாளி அல்லது அலுவலர் உடம்பை நலத் தோடும் வலத்தோடுங் காக்கவேண்டின், நாள்தோறும் இரு சிற்றுண்டியும் இரு பேருண்டியும் உண்ணுதல் வேண்டும். இற்றை யிந்தியருள், இங்ஙனம் நால்வேளை யுண்பவர் நூற்றுமேனி இருபதின்மராகவேயிருப்பர்; மூவேளையுண்பவர் ஐம்பதின்மராகவும், இருவேளையுண்பவர் இருபதின்மராகவும், இரு வேளையும் ஒரு வேளையுமாக உண்பவர் பதின்மராகவும் இருக்கலாம். மூவேளையும் குறைந்த வேளையும் உண்பவருட் பாதிப்பேர் வலுவுணவினராகவும், பாதிப்பேர் எளியவுணவினராகவும் இருக்கலாம்.

  ஊனுணவுக் குறைவினால், எதிர்காலத்தில் ஒரு சாரார் மரக்கறியுணவினராக மாறினும் மாறலாம் (அது நன்றே); உண்ணா வூனை யுண்ண நேரினும் நேரலாம்.


உடைக்குறைவு

  சில ஆடைகளின் நீளமும் அகலமும் குறுகியும், திண்மை குறைந்தும் உள்ளன. கம்பளியாடை போதிய அளவிலும் குறைந்த சம்பளக்காரர் வாங்கக்கூடிய விலையிலுமில்லை. சில மெல்லாடைகளும் முன்போற் கிடைப்பதில்லை.

அணிகல விலையுயர்வு

  வெள்ளியும் பொன்னும் மணிக்கல்லும் முப்பது மடங்கு விலை யேறிவிட்டன. செல்வரல்லாதார் போலியணிகளையே