பக்கம் எண் :

வள்ளுவர் கூட்டுடைமை57

மிக்க அதன் உறுப்பு நாடுகளோ, இதைப் போதிய அளவு கவனியாதிருப்பது அஞ்சத்தக்கதாகும். மக்களினம் வாழும் ஒரே மாநிலமாகிய ஞாலத்தின் (பூமியின்) பரப்பளவு வருமாறு :
நிலப்பரப்பு
57,510,000 சதுரக்கல்
நீர்ப்பரப்பு
139,440,000 சதுரக்கல்
மொத்தப்பரப்பு
196,950,000 சதுரக்கல்
இந்திய நிலப்பரப்பு
3,268,090 சதுரக்கல்
தமிழ்நாட்டு நிலப்பரப்பு
130,069 சதுரக்கல்
                           

  இப் பரப்பளவுகள் நிலநடுக்கம், கடல்கோள், எரிமலை, பெருநிலப் பெயர்வு (continental drift) முதலியவற்றாற் சேணெடுங் காலம் இடையிட்டிடையிட்டு மாறிவரினும், ஞாலத்தின் கன அளவு கதிரவக் குடும்பம் (solar system) அழியும்வரை ஒருபோதும் மாறாதென்று உறுதியாய்ச் சொல்லலாம்.

  ஆகவே, மக்கள் பெருகப் பெருக மாநிலம் விரிவடை வதில்லை. அதற்கு மாறாக, வாழ்நிலமும் விளைநிலமும் குறுகிக் கொண்டே வருகின்றன. ஞாலத்தைச் சேர்ந்த கதிரவக் குடும்பத் தில், மக்கள் குடியேறத்தக்க வேறுலகமுமில்லை. திங்களிற் குடியேறலா மென்றிருந்த குறுங்கனவு மின்னல்போல் மறைந்து விட்டது. திங்கள் மாந்தனுக்கு இறைவன் அமைத்த இராவிளக்கே யென்பது இன்று தெளிவாயிற்று.

  எல்லா வுயிரினங்களும் வடிவளவை முறைப்பட்ட
(geometrical) வேகத்திற் பெருகிவருகின்றன. ஏதேனுமொரு வகையில் தடுக்கப் படாவிடின், ஓரினமே ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் பார் முழுதும் பரவி இடத்தையெல்லாம் அடைத்துவிடுமென்று, 18ஆம் நூற்றாண்டில் லின்னேயசு (Linnaeus) என்னும் சுவீடன் நாட்டு இயற்கை யாராய்ச்சியாளர் உலகிற்கு எச்சரித்தார். உண்டாக்க (Production) வேகத்தினும் மக்கட்பெருக்க வேகம் விரைந்ததென்னும் அஞ்சத்தக்க வுண்மையை, 18ஆம் 19ஆம் நூற்றாண்டுகளிலிருந்த மால்தூசு (Malthus) என்னும் ஆங்கிலேயப் பொருளாட்சிப் புலமையாளர் பலவாறு விளக்கிக்காட்டினார். எல்லா வுயிரினங்களின் வாழ்க்கைப் போராட்டத்தையும் (Struggle for Existence) பற்றி, சென்ற நூற்றாண்டிலிருந்த தார்வின் (Darwin) என்னும் ஆங்கிலேயத் திரிவாக்கக் (Evolution) கொள்கையாசிரியர், உயிரினங்களின் தோற்றம் (Origin of Species) மாந்தன் வரவு (Descent of Man) என்னும் இருபெரு நூல்களில் விரிவாக விளக்கினார்.