பக்கம் எண் :

உலகத் தமிழ்க் கருத்தரங்கு மாநாடு105

16

16

உலகத் தமிழ்க் கருத்தரங்கு மாநாடு

    இன்று, இறைவனருளால், ஐந்தாம் உலகத் தமிழ்க் கருத்தரங்கு மாநாடு மாண்புமிகு முதலமைச்சர் ம.கோ.இராமச்சந்திரனார் தலைமையில் நிகழவிருக்கின்றது. கடந்த மூவாயிரம் ஆண்டாக மறையுண்டு கிடந்த குமரிநாட்டு முழுக்கு, கண்ணெதிரில் நிகழுங் காட்சிபோல் தெள்ளத் தெளியக் காட்டும் திரைப்படம், உண்மைத் தமிழர் அனைவரும் மகிழவும், ஒப்புயர்வற்றதென்று உயர்ந்தோர் புகழவும், உலகஞ் சுற்றிவந்து என்றுந் திகழவும்  இருக்கின்றது.

தமிழாரியப் போராட்டம்

    தமிழர் தம் நாட்டிலேயே வாழ்ந்து தம் தாய்மொழியைப் போற்றி வருகின்றனர்; வேறெந்நாட்டிற்குஞ் சென்று வேற்று மொழியைத் தாக்க வில்லை.

    தமிழ் கி.மு. நூறாயிரம் ஆண்டுகட்குமுன் குமரிநாட்டில் தோன்றிய உலக முதன்மொழி.

"வைய மீன்றதொன் மக்கள் உளத்தினைக்
 கையி னாலுரை கால மிரிந்திடப்
 பைய நாவை யசைத்த பைந்தமிழ்
 ஐயை தாள்தலை கொண்டு பணிகுவாம்."

"ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
 ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் - ஆங்கவற்றுள்
 மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது
 தன்னே ரிலாத தமிழ்."

உலகில் முதன்முதல், எழுதுறைப்பட்ட முழுத்தூய செய்யுளிலக்கியமும், பொருளிலக்கணத்தொடு கூடிய பிண்டவிலக்கணமும், இயலிசை நாடக மென்னும் முத்தமிழ் இணைந்த மாபிண்டத் தமிழும் தோன்றிய காலம் தோரா. கி.மு. 10ஆம்  நூற்றாண்டு. ஐரோப்பாவிற் கிரேக்க நாட்டிற்குக் கிழக்கில் நடுமேலையாசியாவில், கிரேக்கத்திற்கு இனமான ஒரு மொழியைப் பேசிக்கொண்டு, நாடு நகரின்றி மாடுமேய்க்கும் நாடோடிகளாய்த் திரிந்த ஒரு மாந்தர் கூட்டம், இலக்கியமின்றியும் எழுத்தின்றியும்