2
2
தமிழின் தனிப்பெருந் தன்மைகள்
மூவாயிரத்திற்கு மேற்பட்ட உலக மொழிகளுள், இன்றும் பல்வேறு
வகையில் முதன்மையாகவுள்ளது, பொன்னினும் மணியினுஞ் சிறந்ததாக வும், உணவினும் மருந்தினும் இன்றியமையாததாகவும்,
தெய்வமும் திருமறையுமெனக் கண்ணியமாகவும் நம் முன்னோர் போற்றி வளர்த்த செந்தமிழே யென்பது,
முகடேறி நின்று முரசறைந்து விளம்பத்தக்க முழு வுண்மையாகும். அதற்கேதுவான தமிழின் தனிப்பெருந்
தன்மைகள் வருமாறு:
1. முன்மை
இஞ் ஞாலத்தில் மிகப் பழைமையான நிலப்பகுதி யென்று தமிழ்
வரலாற்றால் அறியப்பட்டதும், நிலநூல், கடல்நூல், உயிர்நூல் ஆராய்ச்சி யாளரால் உய்த்துணரப்பட்டதும்,
மாந்தன் பிறந்தகமென்று மாந்தனூலாராற் கண்டுபிடிக்கப்பட்டதும், தெற்கே இந்து மாவாரியில் மூழ்கிப்
போன குமரிக்கண்டம் (Lemuria)
ஆகும்.
“பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள’’
(சிலப்.
11 : 19-20)
என்று ஆயிரத்தெண்ணூறாண்டுகட்கு முன்பே, முற்றத் துறந்த முழு
முனிவரும் நடுநிலைக்குத் தலைசிறந்தவரும் பல்கலைப் பெரும்புலவரு மாகிய இளங்கோவடிகள் கூறியிருப்பது,
கடுகளவுங் கட்டுச் செய்தியன்று. அத் தொன்னிலத்தில் உலக முதல் உயர்தனிச் செம்மொழியாகத்
தோன்றியதனாலேயே.
"ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் - ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது
தன்னே ரிலாத தமிழ்’’
(தண்டியலங்கார
வுரைமேற்கோள்)
என்று பண்டைச் சான்றோரால் தமிழ் சிறப்பித்துப் பாடப்பட்டது
மென்க.
இனி, மறைமலையடிகள், பூரணலிங்கம் பிள்ளை, கா. சுப்பிரமணியப் பிள்ளை, துடிசைகிழார் முதலிய பேரறிஞர்
குமரிநாட்டுத் தமிழ்த் தோற்றத்தைப்பற்றித் தெளிவாகக் கூறியிருப்பவும், என் அரை நூற்றாண்டு
|